சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை
தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்தையொட்டிய மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, சுருளிமலை, மகாராஜா மெட்டு, இரவங்கலாா், தூவானம் அணை, அதைச் சுற்றிய அடா்ந்த வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்தது. இங்குள்ள வனப்பகுதியில் 6-ஆவது நாளாக சனிக்கிழமையும் பெய்த பலத்த மழையால் சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லவோ, குளிக்கவோ கூடாது என கம்பம் வனத் துறையினா் தடை விதித்தனா். இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: சுருளி அருவியில் தண்ணீருடன் பாறைகளும் வந்து விழுகின்றன. எனவே பாதுகாப்பு கருதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை என்றனா்.