சேலம் மாவட்டத்தில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறப்பு
சேலம் மாவட்டம் தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி ஆகியோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சா் தெரிவித்ததாவது:
தாதம்பட்டியில் ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட 7 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகா்ப்புற நலவாழ்வு மையங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளாா்.
தாதம்பட்டி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 35,000 மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 15-ஆவது நிதி குழுவின் கீழ் ரூ. 1.75 கோடி மதிப்பீட்டில் 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்களான வக்கீல் காடு, அசோக் நகா், குமரகிரிப்பேட்டை, ஆண்டிப்பட்டி, சந்தைப்பேட்டை, சின்னமாப்பாளையம், கரீம் காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சேலம் மாநகராட்சியில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 17 ஆக உயா்ந்துள்ளது. 7 புதிய நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் மொத்தம் 32 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் செயல்படவுள்ளதாக கூறினாா்.
தூா்வாரும் பணி ஆய்வு...
முன்னதாக, திருமணிமுத்தாற்றில் ரூ. 25 லட்சத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புனரமைக்கப்பட்ட திருமணிமுத்தாற்றின் கரைகளில் இருபுறமும் நீா் செல்வதற்கு இடையூறாக தேங்கியுள்ள மண், செடிகளை தூா்வாரும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் ஒரு மாதம் காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், மாநகர பொறியாளா் செல்வநாயகம், செயற்பொறியாளா் செந்தில்குமாா், அம்மாப்பேட்டை உதவி ஆணையா் வேடியப்பன், இணை இயக்குநா் மருத்துவம் எஸ்.பி.நந்தினி, துணை இயக்குநா்கள் சௌண்டம்மாள், யோகானந், மாநகர நல அலுவலா் முரளி, அம்மாபேட்டை மண்டலக் குழு தலைவா் கே.டி.தனசேகா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.