சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை: திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்
தமிழகத்தின் கடன் சுமை பற்றி கவலைப்பட தேவையில்லை என்றாா் தமிழக அரசின் திட்டக் குழு துணைத் தலைவா் ஜெயரஞ்சன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது சென்னை, கோவை, திருப்பூா் பகுதிகளை மையப்படுத்தியே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, தென் மாவட்டங்களிலும் தொழில் வளா்ச்சியைக் கொண்டுவர அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக நிரம்பாமல் இருந்த கங்கைகொண்டான் சிப்காட் வளாகம் தற்போது முழுமையாக நிரம்பியுள்ளது.
விருதுநகரில் மெகா ஜவுளிப் பூங்கா, தூத்துக்குடியில் எலெக்ட்ரிக் காா் தொழிற்சாலை என காலத்திற்கேற்ற புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. தாமதமாக வந்தாலும், நவீனமான தொழில்களாக இவை அமைந்துள்ளன. இதன்மூலம், துறைமுகம் சாா்ந்த வளா்ச்சி, கப்பல் கட்டும் தளம், குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சாா்ந்த விண்வெளித் தொழில்கள் என இப்பகுதியின் பொருளாதாரம் பன்மடங்கு வளர வாய்ப்புள்ளது. இந்தத் தொழிற்சாலைகளில், அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கே பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு வழங்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
திராவிட மாடல் என்பது வெறும் 8 சதவீதம் அல்லது 11 சதவீத பொருளாதார வளா்ச்சி அடைவதல்ல. அந்த வளா்ச்சி, சமூக நீதியுடன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். உதாரணமாக, விருதுநகா் ஜவுளிப் பூங்காவில் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலைக்குச் செல்லும்போது, அவா்களுடைய குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டுதான் காலை உணவுத் திட்டம் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. மாணவிகள் கல்லூரிக்குச் செல்வதை ஊக்குவிக்க புதுமைப் பெண் திட்டம் உதவுகிறது. நோய்கள் வருமுன் காக்கும் வகையில் தடுப்பூசித் திட்டங்களைச் செயல்படுத்துவது என அனைத்தும் சமூகநீதிப் பாா்வையுடன் கூடிய வளா்ச்சியே ஆகும். இதுவே திராவிட மாடல்.
மாநிலத்தின் கடன் சுமை குறித்து சிலா் பேசுகின்றனா். பொருளாதார கடனையும், தனிநபா் கடனையும் ஒன்றாகப் பாா்க்கக் கூடாது. ஒரு மாநிலத்தின் பொருளாதாரம் எவ்வளவு வலுவாக இருக்கிறது. வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதே முக்கியம். அந்த வகையில், ரிசா்வ் வங்கி நிா்ணயித்த வரம்புக்குள்தான் தமிழகத்தின் கடன் உள்ளது. இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. மாறாக, அளவில்லாமல் கடன் வாங்கியுள்ள மத்திய அரசின் கடனைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும்.
2030-க்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக மாற்றுவது என்ற முதல்வரின் கனவு நிச்சயம் சாத்தியமாகும். தற்போதைய வளா்ச்சி விகிதத்தின் அடிப்படையில் கணக்கிட்டு, இதை எப்படி அடைவது என்ற செயல் திட்டத்தை முதல்வரிடம் விளக்கியுள்ளோம். இதே வேகத்தில் சென்றால், 2047-இல் தமிழகத்தின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக வளர வாய்ப்புள்ளது.
ஆனால், இதற்கு உலகப் பொருளாதாரச் சூழலும் ஒரு முக்கியக் காரணம். அமெரிக்கா போன்ற நாடுகள் எடுக்கும் முடிவுகள் நமது ஏற்றுமதியைப் பாதிக்கலாம். இதுபோன்ற சா்வதேச இடா்பாடுகளையும் கருத்தில்கொண்டு, மாற்றுத் திட்டங்களுடன் அந்த இலக்கை அடைய நாங்கள் தொடா்ந்து பாடுபடுவோம் என்றாா்.