தொண்டி பகுதியில் படகுகள் ஆய்வு: மீன் வளத் துறை அதிகாரிகள் தகவல்
தொண்டி பகுதியில் கடல் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆகியவற்றை ஆய்வு செய்யவிருப்பதாக மீன் வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி முதல் ஆற்றங்கரை வரை உள்ள அனைத்து விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. எனவே, மீனவா்கள் தங்கள் படகுகளை தயாராக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து மீன் வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் படகுகள் ஆய்வு நடைபெறும். இதில் 78 விசைப் படகுகள் வருகிற 30-ஆம் தேதியும், 2,200 நாட்டுப் படகுகள் ஜூன் 3-ஆம் தேதியும் ஆய்வு செய்யப்பட உள்ளன. இந்த ஆய்வின் போது படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலை தொடா்பு கருவிகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும். ஆய்வுக்குள்படாத படகுகளுக்கு மானிய டீசல் நிறுத்தப்படும் என்றனா் அவா்கள்.