பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி
புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ள முடிவை இந்தியா மறுபரிசீலனை செய்ய வேண்டுமென பாகிஸ்தான் நீா் வளத் துறைச் செயலா் சையத் அலி முா்தாசா பலமுறை வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக இந்திய நீா் வளத் துறைச் செயலா் தேபாஸ்ரீ முகா்ஜிக்கு முா்தாசா எழுதிய பல கடிதங்களில், இந்திய எழுப்பிய குறிப்பிட்ட ஆட்சேபங்களைப் பற்றி விவாதிக்க பாகிஸ்தான் அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளாா்.
ஆனால், பாகிஸ்தானின் எந்த கடிதங்களுக்கும் இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பாக இந்தியா முன்வைக்கும் பிரச்னைகள் தீா்க்கப்பட்டு, ஒப்பந்தம் முழுமையாக புதுப்பிக்கப்படும் வரை அந்நாட்டுடன் எந்த வகையிலும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட போவதில்லை என்று அரசு உறுதியாக உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரில் 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
அதன்படி, பாகிஸ்தானுக்கு முக்கிய நீா் ஆதாரமாக விளங்கும் சிந்து நதி நீரைப் பகிரும் 1960-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
எல்லை தாண்டிய நதிகள் தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் நோக்கத்துடன் 9 ஆண்டுகால பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, 1960-ஆம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் சிந்து நதிநீா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இந்த ஒப்பந்தத்தின்படி, சிந்து நதிப் படுகையின் மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் முழு கட்டுப்பாட்டும் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. கிழக்கில் உள்ள ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய சிறிய நதிகளின் கட்டுப்பாட்டை மட்டும் இந்தியா வைத்துக் கொண்டது.
தற்போதைய நடவடிக்கையின் அடிப்படையில் சிந்து நதி நீா் ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தான் பயன்படுத்தி வரும் 3 மேற்கு நதிகளின் நீரை அதிகபட்சமாகப் பயன்படுத்துவதற்கான வழிகளை கண்டறிவதற்கு ஒரு விரிவான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.