புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
நாட்டில் புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் மெளலானா அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது.
இப்போது மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் இந்த மையம் மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதேபோன்று புதுச்சேரி உள்ளிட்ட 5 இடங்களில் விரைவில் இந்த ஆராய்ச்சி மையம் செயல்பட உள்ளது.
புதுவை சுற்றுலாத் துறை அமைச்சர் க. லட்சுமிநாராயணனை திங்கள்கிழமை சந்தித்த இந்த மையத்தின் இயக்குநர் சரூப் பிரசாத் கோஷ், இதற்காக புதுச்சேரி அரசின் ஒத்துழைப்பைக் கோரினார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பு எப்படி இருந்தது, சோழ பேரரசின் சாம்ராஜ்ஜியம் ஆசிய நாடுகளில் எப்படி பரவியது உள்ளிட்ட ஆராய்ச்சிகளை இந்த மையம் விரிவாக ஆராய்ச்சி செய்யும். மேலும் இது தொடர்பாக சர்வதேச கருத்தரங்கு உள்ளிட்டவை அடிக்கடி நடைபெறும்.
மேலும், இந்த மையத்தின் இயக்குநருடன் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் இயங்கும் சமூக மற்றும் கலாசார படிப்புகள் மையத்தின் இயக்குநர் ஹரிதம் முகர்ஜியும் வந்திருந்தார்.
இந்த இரண்டு அமைப்புகள் மற்றும் புதுச்சேரி அரசின் சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத்துறையும் இணைந்து காலனி ஆதிக்கத்துக்குப் பிந்தைய அரிக்கமேடு தொடர்பான ஒருநாள் ஆராய்ச்சி தேசிய கருத்தரங்கை செப்டம்பர் 14 ஆம் தேதி அரிக்கன்மேடு பகுதியில் நடத்த உள்ளன.
இது தொடர்பாகவும் அமைச்சர் லட்சுமிநாராயணனை இக்குழு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழுவுடன் அரவிந்தர் ஆசிரமத்தைச் சேர்ந்த கோஸ்வாமி உடனிருந்தார்.
இதையும் படிக்க | ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரம்: அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு!