புதை சாக்கடை திட்டப் பள்ளம் அருகே வைக்கப்பட்ட எச்சரிக்கை தடுப்புகள்
செங்கல்பட்டு: தினமணி செய்தி எதிரொலியாக செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் அருகே எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனை அடுத்து சாலைகளில் ஜேசிபி மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களில் எதுவுமே கற்கள் பதிக்கப்படாமல் மீண்டும் மூடப்படுகின்றன. பல இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்களை அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனா்.
மேலும், பள்ளங்கள் மூடப்படாமலும் எச்சரிக்கை பலகையோ தடுப்புகளோ வைக்காமல் எந்தவித அறிகுறியும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்களும் சேதமடைந்து வாகன ஓட்டிகளும் காயம் அடையும் அவல நிலை உருவாகிறது.
புதை சாக்கடை திட்ட பள்ளங்கள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்நோக்கியுள்ள நிலையில் தினமணியில் வந்த செய்தி எதிரொலியாக அப்பகுதிகளில் எச்சரிக்கை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
