செய்திகள் :

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

post image

மணப்பாறை: மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று. நாட்டுப்பற்று என்பது நிலத்தின் மீதான் பற்று என்பதைக் கடந்து மக்கள் மீதான பற்றாக வளர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மணப்பாறையில் நடைபெற்ற பாரத சாரண, சாரணியர் வைர விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது, இது மணப்பாறையா இல்லை, பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் மாணவர் பாசறையா என்று சந்தேகப்படும் அளவுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர்கள், ஆட்சியர், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.

ஜம்போரி எனப்படும் பெருந்திரள் அணியாக நடைபெற்று வருகிறது. இன்னும் சிறப்பாக, கலைஞர் நூற்றாண்டு விழாவாகவும் இணைத்து நடத்தப்படுகிறது. இன்றைக்கு பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாட்டிற்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. இந்தப் புகழ், இந்தியப் புகழ். இன்னும் சொன்னால், உலகப் புகழ்.

சாரண, சாரணியர் இயக்கம், உலக அளவிலான இளைஞர்களின் இயக்கங்களில் ஒன்றாகவும், உலக பேரியக்கங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

சாரண, சாரணியர் இயக்கத்தில் எட்டில் ஒரு பங்கு நாம்

இந்தியா முழுவதும், 80 இலட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவங்களின் எண்ணிக்கை மட்டும் 12 லட்சம் மாணவர்கள். எட்டில் ஒரு பங்கு நாம் இருக்கிறோம். எதுவாக இருந்தாலும், தமிழ்நாட்டின் பங்கு என்பது, எப்போதும் அதிகமாக தான் இருக்கும் என்பதை சாரணர் இயக்கத்திலும் உண்மை ஆக்கியிருக்கிறோம்.

நீங்கள் பங்கு பெற்றிருக்கும் சாரணர் இயக்கம் என்பது, உடலினை உறுதிசெய்யும் இயக்கமாக, உள்ளத்தை உறுதிசெய்யும் இயக்கமாக, ஒழுக்கத்தை உருவாக்கும் இயக்கமாக, ஒழுங்கை உருவாக்கும் இயக்கமாக இருக்கிறது.

உங்கள் எல்லோரையும் இந்த சீருடையில் பார்க்கும்போது என்னுடைய உள்ளம் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏன் என்றால், நாளைய குடிமக்களான இளைய தலைமுறையிடம் சமூக சேவை செய்தல், உற்றுநோக்குதல், அறிவுத்திறனை வளர்த்தல் போன்ற பல்வேறு திறன் வளர்ப்பிலும் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.

மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று

இந்த நேரத்தில் நான் உங்களிடம் சொல்லிக்கொள்ள விரும்புவது, நாட்டுப் பற்று என்பது, நிலத்தின் மீதான பற்று என்பதை கடந்து, மக்கள் மீதான பற்றாக வளரவேண்டும். மக்கள் மீதான பற்றுதான் உண்மையான நாட்டுப் பற்று. இப்படி, இளைய தலைமுறைய இனிய தலைமுறையாக இந்த சாரணர் இயக்கம் மாற்றுகிறது.

ராணுவ கட்டுக்கோப்பு இளைய தலைமுறையினரிடம் வளரவேண்டும் என்ற நோக்கத்தோடு தான், ராணுவ வீரரான பேடன் பவல், இந்த இயக்கத்தை உருவாக்கினார்.

சாரண, சாரணியர் இயக்கத்தின் இந்த பெருந்திரளணி, ஒவ்வொரு நாட்டிலும், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரைக்கும் 18 பெருந்திரளணிகளும், 5 சிறப்பு பெருந்திரளணிகளும் நடந்திருக்கிறது.

2000-ஆவது ஆண்டில் தமிழ்நாட்டில் சாரண சாரணியர் இயக்கப் பொன் விழா பெருந்திரளணி நடந்தபோது, தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அன்றைக்கு அதை நடத்திக்காட்டினார். இப்போது வைரவிழா கொண்டாடும்போது நான் முதல்வராக இருக்கிறேன். தலைவர் கலைஞர்தான், இந்த நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி. தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களை உருவாக்கியது அவர்தான். எனவே, அவரது நூற்றாண்டு விழாவை நீங்கள் கொண்டாடுவது பொருத்தமானதுதான்.

நாம் எல்லோரும் சமத்துவத்துடனும், சகோதரத்துவ உணர்வோடும் ஒன்றிணைந்து இந்தியர் என்ற பெருமிதத்தோடு, ஒற்றுமையுடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். அந்த வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான குழந்தைகள் ஒற்றுமையாக ஒரே இடத்தில் ஒன்றுகூடி, தங்களின் பண்பாட்டை பகிர்ந்துகொள்ளவும், வளர்த்து கொள்ளவும், அன்பை மேம்படுத்திடவும் மாபெரும் இந்த பெருந்திரளணி நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”-என்று கணியன் பூங்குன்றனார் அவருடைய முதுமொழிக்கேற்ப சவுதி அரேபியா, மலேசியா, இலங்கை, பாளம் மற்றும் இந்தியாவை சேர்ந்த பல மாநிலங்கள் ஒருங்கிணைந்து கடந்த 6 நாட்களாக ஒரே குடும்பமாக இருப்பது தான் நம்முடைய அன்பின் வலிமை.

இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள வெளி மாநிலத்தவர், வெளிநாட்டினர் தமிழ்நாட்டின் பெருமைகளையும், பண்பாட்டையும் பற்றி தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள். அதேபோல் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களின் பெருமைகளையும், பண்பாட்டையும் நம்முடைய மாணவ மாணவியர்கள் தெரிந்துக்கொண்டு இருப்பீர்கள்.

நம்முடைய திராவிட மாடல் அரசால், இந்த விழாவை வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் பெருந்திரளணி சபை, திட்டக்குழு,தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக் குழுக்கள் உள்ளிட்ட 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழாவில் தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாரண, சாரணியர்கள் கலந்துக்கொண்டு தங்களின் பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

இங்கு நடைபெற்ற உலகளாவிய கிராமம் அரங்கம் எல்லோரையும் ஈர்த்ததாக கேள்விப்பட்டேன். பண்பாட்டை அறிமுகம் செய்யும் அரங்கமாகவும், ஐ.நா. அவை சொல்லும் இலக்குகளை கற்பிக்கும் அரங்கமாகவும் இது அமைந்திருக்கிறது.

17 இலக்குகளிலும் நட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னிலை

அண்மையில் வெளியான நிதி ஆயோக் அறிக்கைப்படி 17 இலக்குகளிலும் நட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது.

தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை

தொடக்க விழாவில் ஒரே இடத்தில் சாரண சாரணியர் இயக்க இறைவணக்கப் பாடல் நிகழ்வில் அதிக நபர்கள் பங்கேற்றது, ஒரே இடத்தில்

சாரண,சாரணியர் இயக்கத்தினர் சாரண வணக்கம் தெரிவித்தது என்று 5 பெரும் சாதனைகளை அங்கீகரித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை,

சாரண,சாரணியர் இயக்ககம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்திற்கு 5 உலக சாதனை விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமை.

நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் புதிய தலைமை அலுவலகம்

நம்முடைய பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சாரணர் இயக்கத்தில் சேர்க்கும் வகையில் மேலும் பல ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக, தமிழ்நாடு சாரண இயக்கத்திற்கான புதிய தலைமை அலுவலகம் நவீன பயிற்சி வசதிகளோடு ரூ.10 கோடி செலவில் அமைக்கப்படும்.

உடல் உறுதி, உள்ள உறுதி, ஒழுக்கம், வாய்மை இவற்றோடு அனைவரும் சமம் என்ற பண்பாட்டையும் கற்று அதை கடைபிடிப்பவர்களாக நீங்கள் எல்லோரும் செயல்படவேண்டும்.

ஒற்றுமை உணர்வை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது

இந்திய நாடு பெற்ற விடுதலை என்பது ஒற்றுமையால் பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நாம் எல்லோரும் சமம் என்ற உணர்வோடு ஒற்றுமையாக போராடியதால்தான் நாடு விடுதலை பெற்றது. அந்த ஒற்றுமை உணர்வை நாம் எப்போதும் விட்டுவிடக் கூடாது.

உள்ளம் ஒன்றாக இருக்கட்டும்

இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வந்திருக்கிறீர்கள். மானுடத் தத்துவத்தால் நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற பரந்த உள்ளமும் நமக்கு இருந்தாக வேண்டும். கூடாரங்கள் தனித்தனியாக இருக்கட்டும் ஆனால் உள்ளம் ஒன்றாக இருக்கட்டும் என்று சொல்வார்கள். அப்படி, எங்கிருந்தோ இங்கு வந்து ஒன்றாக தங்கிய நீங்கள் எல்லோரும் இங்கிருந்து பிரிந்து சென்றாலும் உள்ளத்தால் ஒருவர் என்ற உணர்வோடு செல்லவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

உயர்சாதித் தலைவர்கள் பழங்குடியினர் விவகாரத் துறைக்குத் தலைமை தாங்க வேண்டும், இதனால் பெரிய மாற்றத்தை காண முடியும் என கேரளத்தைச் சேர்ந்த பாஜகவின் ஒரே மக்களவை உறுப்பினரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி ... மேலும் பார்க்க

ராஜேஷ் லக்கானி மத்திய பணிக்கு மாற்றம்!

சென்னை: வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டுள்ளாா். தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் நவோதயா பள்ள... மேலும் பார்க்க

வாக்காளா்கள் 'வன்முறையை விட கல்வியை'த் தோ்ந்தெடுங்கள்: பஞ்சாப் முதல்வா் வலியுறுத்தல்

புது தில்லி: தில்லியில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களை 'வன்முறையை விட கல்வியை' தோ்வு செய்யுமாறு வலியுறுத்தினாா். ஆம் ஆத்மி கட்சி இளைஞா்... மேலும் பார்க்க

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை விருது!

திருச்சி: பாரத சாரண, சாரணியா் இயக்கத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வெள்ளி யானை சிலை விருதும், திருச்சி மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாருக்கு வெ... மேலும் பார்க்க

அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி

சென்னை: அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அந்த 'மாசு'பட்டவர் யார் என்று நமக்கு இதுவரை தெரியவில்லையே? என்றவர், பத்திரிகையாளர்களின் செல்போனை பறிமுதல் செய்யும் நடவடிக்கை மிக மிக கண்டனத்துக்குரியது என பாஜக ... மேலும் பார்க்க

தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!

புதுதில்லி: இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை சுதந்திரமான மற்றும் நியாயமாக நடத்துகிறதா என்பதை கண்காணிக்க 'ஈகிள்' என்ற பெயரில் 8 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைந்துள்ளது. இந்த குழுவில் அஜய் மாக்க... மேலும் பார்க்க