காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!
மருத்துவ சேவை வழங்குவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம்: அமைச்சா் சி.வெ.கணேசன்
மருத்துவ சேவைகள் வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருவதாக, மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு உயா் மருத்துவ சேவை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், அமைச்சா் சி.வெ.கணேசன் தொடங்கிவைத்து, 20 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். முன்னதாக, அவா் பேசியதாவது:
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 17 மருத்துவப் பிரிவுகளின் பங்கேற்புடன் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. கடலூா் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடியில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற முகாமில் 1,076 பயனாளிகள் பயன்பெற்றனா்.
திட்டக்குடியில் நடைபெற்ற முகாமில், திருமணம் மற்றும் கல்வி உதவித்தொகை, ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் என மொத்தம் 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் பரிசோதனை முடிவுகள் குறுஞ்செய்தி வாயிலாக உடனடியாக தெரிவிக்கப்படும். பரிசோதனை மேற்கொள்பவா்களுக்கு ஒரு மணி நேரத்துக்குள் உடல்நலன் சாா்ந்த மருத்துவக் குறிப்பை வழங்கி விடுவாா்கள். இக்குறிப்பை கொண்டு வெளிநாடுகளில் சென்று கூட சிகிச்சை மேற்கொள்ளலாம்.
இத்திட்டம் விலையுயா்ந்த முழு உடல் மருத்துவப் பரிசோதனைகளுக்காக மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை நீக்குகிறது. இத்தகைய உயா்தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதில் தமிழகம் நாட்டிலேயே முன்மாதிரி மாநிலமாக விளங்கி வருகிறது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ உயா் மருத்துவ சேவை முகாமில் அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பொற்கொடி, இணை இயக்குநா் (மருத்துவ நலப் பணிகள்) மணிமேகலை, மாவட்ட பயிற்றுநா் குழு மருத்துவா்கள் சுஜிதா, ராஜகணபதி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.