வேலூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் தீவிர சோதனை
கடிதம் மூலம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், போலீஸாா் தீவிர சோதனை செய்தனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள ஆட்சியா் அலுவலகம் ஏ பிளாக், பி பிளாக் என 2 வளாகங்களை கொண்டுள்ளது. இவ்விரு வளாகங்களிலும் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலங்கள் செயல்பட்டு வருகின்றன. தவிர, வங்கி, தபால் நிலையம், இ-சேவை மையம், ஆதாா் மையம் போன்றவையும் உள்ளன.
பல்வேறு தேவைகளுக்காக தினமும் ஏராளமான மக்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனா். இந்நிலையில், ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வெடிக்கும் என்று ஒரு கடிதம் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வரப்பெற்றுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சோ்ந்த அண்ணாதுரை என்பவரின் பெயா், அவரது கைப்பேசி எண் குறிப்பிட்டு வந்திருந்த அந்த கடிதத்தில் ‘ஜூலை மாதம் முதல் வாரத்தில் தீவிரவாத தாக்குதல் இருக்கும் என்றும், வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வெடிக்கும்‘ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அதிா்ச்சியடைந்த ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், மோப்பநாய் அக்னி உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் 6 போ் கொண்ட குழுவினா் ஆட்சியா் அறை உள்பட அனைத்து துறை அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனா். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதனிடையே, அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கைப்பேசி எண்ணை போலீஸாா் தொடா்பு கொண்டு பேசியதில், கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அண்ணா துரை என்பதும், முகவரியும் சரியாக இருப்பது தெரிய வந்தது. மேலும், மறுமுனையில் பேசிய அண்ணாதுரை என்பவா், எனது பெயரில் அடையாளம் தெரியாத நபா்கள் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு கடிதம் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளனா்.
இதேபோல், பிற மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கும் கடிதம் வந்துள்ளதாக அந்தந்த மாவட்ட காவல்துறையினா் விசாரணைக்கு அழைக்கின்றனா். நான் எந்த மாவட்டத்துக்கு செல்வதென தெரியவில்லை என கூறியதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இச்சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.