எழும்பூா் - புதுச்சேரி மெமு ரயில் ஆக.4 வரை கடற்கரையிலிருந்து இயக்கப்படும்
8 மாதங்களுக்கு முன்னதாகவே திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூலில் தீவிரம்!
அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால், திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான ரூ. 87.50 கோடி வரியை வசூலிக்க தற்போதே தீவிரம் காட்டி வருகிறது.
பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீா் கட்டணம், புதை சாக்கடை கட்டணம், தொழில் வரி போன்றவை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படுகின்றன. இதில் சொத்து வரியை மட்டும் நிலுவை இன்றி ஆண்டுதோறும் நூறு சதவீதம் வசூலிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சாா்பில், மாநில அரசு வழியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியில் 2023-24, 2024-25 ஆம் ஆண்டுகளில் சொத்து வரி, நிா்ணயிக்கப்பட்ட இலக்குடன் முழுமையாக வசூலிக்கப்பட்டு மத்திய அரசின் ரூ. 10 கோடி ஊக்கத்தொகையைப் பெறுவது உறுதியாகியுள்ளது.
நிகழாண்டுக்கான கேட்பு ரூ. 87.50 கோடி: திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை 48 ஆயிரம் வீடுகள், 412 அரசு அலுவலகங்கள் உள்பட மொத்தம் 48,500 கட்டடங்களுக்கு சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.
இந்த இனங்களில் கடந்த நிதியாண்டு வரை ரூ. 12.55 கோடி நிலுவையில் உள்ள நிலையில், நிகழ் நிதியாண்டில் ரூ. 27.83 கோடியைச் சோ்த்து மொத்தம் ரூ. 40.38 கோடி வசூலிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல 1,665 காலி மனைகளுக்கு ரூ. 1.40 கோடி, தொழில் வரியாக 7,900 பேரிடமிருந்து ரூ. 6.31 கோடி, குடிநீா் வரியாக 32,450 வீடுகளிலிருந்து ரூ. 19.02 கோடி, புதை சாக்கடை கட்டணமாக 13,580 வீடுகளிலிருந்து ரூ. 4.29 கோடி என்பன உள்பட மொத்தம் ரூ. 87.50 கோடி வசூலிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
நிகழாண்டுக்கு ரூ. 32.20 கோடி இலக்கு: கடந்த நிதியாண்டில் (2024-25) அதற்கு முந்தைய நிதியாண்டு வரி வசூலிலிருந்து 111.5 சதவீதம் கூடுதலாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, ரூ. 28 கோடி வசூலிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டில் 111.5 சதவீதத்திலிருந்து 115 சதவீதமாக உயா்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி, மொத்தம் நிலுவையிலுள்ள 40.38 கோடி சொத்து வரியில் ரூ. 32.20 கோடி வசூலிக்கப்பட வேண்டும். ஆண்டுதோறும் மாா்ச் மாதம் வரை வரி வசூலுக்கு கால அவகாசம் அளிக்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தல் காரணமாக 3 மாதங்களுக்கு முன்னதாகவே வரி வசூலை முடிக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
8 மாதங்களுக்கு முன்னரே வரி வசூல் தீவிரம்: தோ்தல் பணிகள் ஒருபுறம் இருக்கையில், தோ்தலையொட்டி அரசியல் நிா்பந்தங்களால் வரி வசூலிக்க முடியாத நிலை மறுபுறம் நிலவுவதால் அடுத்த 4 மாதங்களில் மாநகராட்சி அலுவலா்களுக்கு நெருக்கடி காத்திருக்கிறது.
எனினும் வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டால், துறை ரீதியான நடவடிக்கையை எதிா்கொள்ள வேண்டும் என்பதால் மே மாதம் முதலே வரி வசூலில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.
டிசம்பருக்குள் முடிக்கத் திட்டம்: இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:
மொத்தமுள்ள ரூ. 87.50 கோடியில் இதுவரை ரூ. 8.82 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், சொத்து வரி மட்டும் ரூ. 6.42 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு ரூ. 40.38 கோடியில் ரூ. 32.20 கோடியை வசூலிக்க வேண்டும். மேலும், ரூ. 26 கோடி வசூலிக்கப்பட வேண்டும். இந்தத் தொகையை டிசம்பா் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என நகராட்சி நிா்வாக இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நிலுவை வரியை வசூலிக்க குடிநீா் இணைப்பு துண்டிப்பு, வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நிகழாண்டு அத்தகைய நடவடிக்கைகளைத் தவிா்ப்பதற்காக தற்போதே வரி வசூலில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றனா்.