PMK: நிறுவனர் ராமதாஸுக்காகப் போடப்பட்ட நாற்'காலி' - அன்புமணி தலைமையில் பொதுக்குழுக் கூட்டம்
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சமீபத்தில் ஆகஸ்ட் 17-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து, பா.ம.க தலைவர் அன்புமணி ஆகஸ்ட் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார். இதனால், இருதரப்புக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அன்புமணி அறிவித்திருக்கும் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்குமாறு ராமதாஸ் தரப்பிலிருந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், `ராமதாஸ் மனுவைத் தள்ளுபடி செய்து, அன்புமணி பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை' என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அன்புமணி, `இது நீதிக்கும் அறத்திற்கும் கிடைத்த வெற்றி." எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அன்புமணி குறிப்பிட்டப்படி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று காலை 11:00 மணி முதல் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இன்று கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இந்தப் பொதுக்குழுக் கூட்ட மேடையில் பா.ம.க நிறுவனரும், தலைவருமான ராமதாஸுக்கென ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கிறது. ராமதாஸ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், அந்த நாற்காலி அப்படியே போடப்பட்டிருக்கிறது.