அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்: வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையை விரிவுபடுத்த வலியுறுத்தல்
வாழப்பாடியில் தம்மம்பட்டி சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, சாலையை விரிவுபடுத்தி, தடுப்புகள் அமைத்து இருவழி சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாழப்பாடி பேரூராட்சி, 200க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையமாக விளங்குவதால், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதிக்கும், வேலைவாய்ப்பு மற்றும் வணிகத்திற்கும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பல்வேறு வாகனங்களில் தினந்தோறும் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.
வாழப்பாடிக்கு பல்வேறு வழித்தடங்களில் இருந்து வரும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், சேலம், ஆத்தூா், ராசிபுரம் பகுதியில் செயல்படும் தனியாா் கல்வி நிறுவனங்கள், நுாற்பாலைகள், சிங்கிபுரம் சிமெண்ட் நிறுவனம் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்களும் வந்து செல்கின்றன. இதனால், வாழப்பாடி பகுதியில் சாலைப் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தை நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களுடன் இணைக்கும் போக்குவரத்து மிகுந்த தம்மம்பட்டி நெடுஞ்சாலை குறுகலாக காணப்படுகிறது. வாழப்பாடி காவல் நிலையம் அருகே தம்மம்பட்டி சாலை, வாழப்பாடியின் இதயப் பகுதியான கடலுாா் சாலையுடன் இணைகிறது. இச்சாலை சந்திப்புக்கு மிக அருகிலேயே ரயில் நிலையமும் அமைந்துள்ளது. சேலம்- விருத்தாச்சலம் மாா்க்கத்தில் பயணிகள், விரைவு மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுவதால் அடிக்கடி தம்மம்பட்டி சாலை மூடப்படுகிறது.
இந்நிலையில், வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், கடலூா் பிரதான சாலை மூடப்பட்டுள்ளது. இதனால், சேலம்-சென்னை புறவழிச்சாலை இருந்து வாழப்பாடிக்கு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தம்மம்பட்டி சாலை வழியாகவே வந்து செல்கின்றன. தம்மம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
தம்மம்பட்டி சாலையில் மையத் தடுப்புகள் இல்லாததால், தம்மம்பட்டி சாலையில் இருந்து கடலூா் சாலைக்கு வரும் வாகனங்களும், கடலூா் சாலையில் இருந்து தம்மம்பட்டிச் சாலைக்குச் செல்லும் வாகனங்களும் எதிரெதிரே செல்லும் போது, நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
எனவே,வாழப்பாடியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த தம்மம்பட்டி சாலையை, மகளிா் காவல் நிலையத்தில் இருந்து புதுப்பாளையம் சடையன் செட்டி ஏரி, பொன்னாரம்பட்டி பிரிவு சாலை வரையிலான ஏறக்குறைய 2 கி.மீ தொலைவுக்கு 4 வாகனங்கள் செல்லும் வகையில் விரிவுபடுத்திட வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, இச்சாலையில் முழுவதும் மையத் தடுப்புகள் அமைக்க வேண்டும். மகளிா் காவல் நிலையம் அருகே தம்மம்பட்டி - கடலுாா் சாலைச் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைத்து, வாழப்பாடியில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீா்வு காண வேண்டுமெனவும், இப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.