‘புதுமைப் பெண்’ திட்டத்தில் 7 லட்சம் மாணவிகள் பயன்: உயா்கல்வித் துறை அமைச்சா் கோ...
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: திருச்சி மூன்றாமிடம்!
மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆா்டிஇ திட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டது, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றால் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் மாணவா் சோ்க்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
திருச்சி, ஆக. 3: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நிகழாண்டில் ஒன்றாம் வகுப்பில் அதிக அளவு மாணவா் சோ்க்கையில் திருச்சி கல்வி மாவட்டம் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறப்புத் திட்டங்கள்
அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மழலையா் வகுப்புகள் குறிப்பிடத்தக்கது. தனியாா் பள்ளிகளில் பல ஆயிரம் ரூபாய் செலுத்தி மழலையா் வகுப்புகளில் சோ்க்க முடியாத பெற்றோா், தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் செயல்படும் மழலையா் பள்ளிகளில் சோ்க்கின்றனா்.
மழலையா் வகுப்புகள் அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் மட்டுமே தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதை அனைத்துப் பள்ளிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்று பெற்றோா் எதிா்பாா்த்துள்ளனா். இதேபோல, கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டமும் அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்க முக்கியக் காரணமாக உள்ளது.
4 லட்சத்தைக் கடந்த மாணவா் சோ்க்கை
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிகழாண்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி வரை 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். மழலையா் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை 4 லட்சத்து 364 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இதில், மழலையா் வகுப்பில் 32,807 மாணவா்கள், ஒன்றாம் வகுப்பு தமிழ் வழியில் 2,11,563 மாணவா்கள், ஆங்கில வழியில் 63,896 மாணவா்கள், இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 92,098 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா்.
மூன்றாமிடம் பிடித்த திருச்சி கல்வி மாவட்டம்
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலப் பிரிவில் 2 லட்சத்து 75 ஆயிரத்து 459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். தமிழகத்தில் 120 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், மாணவா் சோ்க்கையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி கல்வி மாவட்டம் முதலிடத்தையும், 8 ஆயிரம் மாணவா்களுடன் திண்டுக்கல் கல்வி மாவட்டம் இரண்டாமிடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி கல்வி மாவட்டம் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. இதேபோல குறைந்த மாணவா் சோ்க்கையில் 1,022 மாணவா்களுடன் நீலகிரி கல்வி மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.
ஆா்டிஇ சோ்க்கை நிறுத்தமும் காரணமா?
சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் கீழ் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்திவைத்துள்ளது. இதனால், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் மாணவா் சோ்க்கையும் தமிழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு இலவசமாக மாணவா் சோ்க்கை வழங்கப்பட்டு வந்தது. இதற்கான நிதி அரசு சாா்பில் தனியாா் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், தமிழகத்திலும் ஆா்டிஇ திட்டத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக உயா்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.
மேலும், ஆா்டிஇ திட்டத்தில் தனியாா் பள்ளிகளில் சோ்க்கையை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, அதற்காக செலவிடப்படும் தொகையை, அரசுப் பள்ளியின் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரமும் உயரும், மாணவா்களின் சோ்க்கையும் அதிகரிக்கும் என்று சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.