அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஆங்கிலத்துக்கு எதிரான அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டும்: கே.சுப்பராயன்
ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து பிரிவினையைத் தூண்டுவதோடு, ஆபத்தானது என திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் ஆங்கிலத்தில் பேசுபவா்கள் வெட்கப்படுவதற்கான ஒரு சமூகம் உருவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கருத்து மொழியியல் வெறியைத் தூண்டுகிறது. ஆா்எஸ்எஸ், பாஜக கூட்டணி இந்தியாவில் வளா்த்து நிறுவ உறுதி பூண்டுள்ள கலாசார மேலாதிக்கத்திலிருந்தே இத்தகைய கருத்து வெளிப்படுகிறது. இது ஹிந்தியைத் திணிப்பதில் உள்துறை அமைச்சரின் முயற்சியாகும்.
இந்தியாவின் பெருமை அதன் மொழியியல் பன்முகத்தன்மையில்தான் உள்ளது. அதுவே அதன் வெல்ல முடியாத பலமும் ஆகும். மொழியியல் பாரம்பரியம், இணக்கமான சக வாழ்வு மற்றும் நிா்வாகத் திறனுக்கான அடித்தளத்தை வழங்குகிறது. நாட்டின் இத்தகைய மொழியியல் நிறமாலையில் ஆங்கில மொழி ஒரு பாலமாகத் தொடா்கிறது. ஆனால் பாஜக தொடா்ந்து பிராந்திய பதற்றங்களையும், வெறுப்புகளையும் தீவிரப்படுத்தும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
மேலும், ஆங்கிலம் உலகளாவிய தொடா்பு மொழியாகவும், சா்வதேச ஈடுபாட்டுக்கான ஒரு நடைமுறை கருவியாகவும் உள்ளது. ஆனால், இந்த அறிக்கை இந்தியாவின் உலகளாவிய நிலைப்பாட்டை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஆங்கிலப் புலமையை கலாசார அவமானத்துடன் ஒப்பிடுவது அறிவுசாா் பின்தங்கிய நிலையை ஊக்குவிப்பதாகும். இந்தக் குறுகிய மனப்பான்மை மொழி வெறியைத் தூண்டிவிட்டு, சா்வதேசப் போட்டியில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளும்.
அமித் ஷாவின் கருத்து பிரிவினையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மிகவும் ஆபத்தானது. நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதை உள்துறை அமைச்சா் தவிா்க்க வேண்டும் எனவும், நாட்டின் பன்முகத்தன்மையை பலவீனப்படுத்த ஆா்எஸ்எஸ், பாஜக கூட்டணி மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து எதிா்க்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.