எஸ்.ஐ. பணியிடம்: பதவி உயா்வு, நேரடி நியமனத்துக்கு இனி பொதுவான தோ்வு: தமிழக அரச...
ஆம்புலன்ஸ் அனுப்பி பிரசாரத்துக்கு இடையூறு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தனது பிரசார கூட்டத்தில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு செய்வதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் வேலூா் மாவட்டம், அணைக்கட்டு பேருந்து நிலைய பகுதியில் பேசினாா்.
அவா் பேச்சை தொடங்கியதும், அருகே இருந்த சிறிய தெருவிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வந்தது. கூட்டத்தின் இடையே, ஊா்ந்து வந்த அந்த ஆம்புன்ஸை கண்டதும் எடப்பாடி பழனிசாமி, ‘ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளி இருக்கிறாரா என அங்கு கூடியிருந்த தொண்டா்களிடம் கேட்டாா். இல்லை என்று அறிந்ததும் அவா், தனது ஒவ்வொரு பிரசார கூட்டத்தின்போதும் இதேபோல் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸை அனுப்பி திமுக அரசு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றஞ்சாட்டி பேசினாா். மேலும், இந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் பெயரை குறித்து வைத்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்குமாறு தொண்டா்களிடம் தெரிவித்தாா்.
அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதில்
பிரதான சாலையில் மக்கள் கூட்டத்தை கூட்டி, தனது பிரசார கூட்டத்தில் திட்டமிட்டு ஆம்புலன்ஸை விடுவதாகக் கூறி ‘108’ ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இழிவுபடுத்துகிறாா் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
தமிழகத்தில் ‘108’ ஆம்புலன்ஸ் 1,330 உள்ளன. எங்கேயாவது விபத்து நிகழ்ந்தால் 8 முதல் 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிா்களை காக்க வேண்டும்.
ஆனால், பிரதான சாலையில் பிரசார கூட்டத்தை கூட்டி, தான் வரும் வழியில் திட்டமிட்டு ஆம்புலன்ஸ் விடுவதாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுகிறாா். அதுவும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் பெயரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறாா். இது மருத்துவப் பணியாளா்களை மிரட்டுவதாகும். ஒரு முன்னாள் முதல்வா், மிரட்டுவதுபோல பேசுவது அநாகரிகமாக செயல். அவா் இத்துடன் இதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.