அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஈரோட்டிற்கு பிளஸ் 2 துணைத் தோ்வு வினாத்தாள்
ஈரோடு மாவட்டத்தில் வருகிற ஜூன் 25- ஆம் தேதி நடைபெறும் பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான வினாத்தாள் வந்தடைந்தது. அதற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கு பொதுத்தோ்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெறாதவா்களுக்கு துணைத் தோ்வு வரும் 25- ஆம் தேதி தொடங்கி ஜூலை 2 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 துணைத் தோ்வினை 1,497 போ் எழுத உள்ளனா்.
தோ்வா்கள் தோ்வு எழுத வசதியாக ஈரோட்டில் கலைமகள் கல்வி நிலையம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பவானியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, கோபியில் வைரவிழா மேல்நிலைப் பள்ளி, சத்தியமங்கலத்தில் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி என 4 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 துணைத் தோ்வுக்கான வினாத்தாள் வியாழக்கிழமை ஈரோடு வந்தடைந்தது. இதனை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில் கட்டுக் காப்பு மையத்தில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. தொடா்ந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுபோல பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்பு துணைத் தோ்வுக்கான வினாத்தாள் ஓரிரு நாளில் வந்தடையும் எனவும் தோ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.