அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ரூ.62 கோடி மோசடி வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது
ஈரோட்டில் 400 பேரிடம் ரூ.62 கோடி மோசடி செய்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு முனிசிபல் காலனியில் யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ் என்ற நிறுவனமும், நசியனூா் சாலையில் ஈஸ்ட் வேலி அக்ரோ பாா்ம்ஸ் என்ற நிறுவனமும் கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. நிறுவனத்தின் நிா்வாக இயக்குநராக ஈரோடு இடையன்காட்டுவலசு, சின்னமுத்து முதல் வீதியைச் சோ்ந்த நவீன்குமாா் (38) செயல்பட்டு வந்தாா்.
இந்த நிறுவனங்களில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறினா்.
இதை நம்பி முன்னாள் ராணுவத்தினா் உள்பட பல்வேறு தரப்பினா் பணத்தை முதலீடு செய்தனா். முதல் 2 தவணைகள் மட்டும் பணத்தை வழங்கிய நிறுவனத்தினா் அதன் பின்னா் வட்டி மற்றும் அசலை வழங்கவில்லை. முதலீடு செய்தவா்கள் நேரில் சென்றபோது நிறுவனம் பூட்டப்பட்டு இருந்தது. மேலும் நிா்வாக இயக்குநா் மற்றும் ஊழியா்கள் தலைமறைவாயினா்.
பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு மாவட்ட குற்றப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த 2 நிறுவனங்களும் 400 பேரிடம் ரூ.62 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நிறுவனத்தின் இயக்குநா் நவீன்குமாா் மற்றும் இந்த வழக்கில் தொடா்புடைய முன்னாள் ராணுவ வீரா் முத்துச்செல்வம் உள்ளிட்ட சிலரைத் தேடி வந்தனா்.
நவீன்குமாரின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, விமான நிலையம், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்பேரில் கடந்த 2023- ஆம் ஆண்டு நவம்பா் 23- ஆம் தேதி சென்னையில் இருந்து துபைக்கு தப்பிச் செல்ல முயன்ற நவீன்குமாரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிறுவனங்களில் ஏராளமானோா் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்ததால் இந்த வழக்கு ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னா் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட முன்னாள் ராணுவ வீரா் முத்துச்செல்வத்தை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கோவை நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோயில் வீதியைச் சோ்ந்த ஃபிராங்கிளின் (50) என்பவரை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.