தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ஏற்காடு மலா் கண்காட்சி: ஆயத்த பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு
ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா் கண்காட்சிக்கான ஆயத்த பணிகளை விரைந்து முடிக்குமாறு சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டாா்.
ஏற்காட்டில் 48 ஆவது கோடைவிழா, மலா்கண்காட்சி மே 23 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை 7 நாள்கள் நடைபெறவுள்ளது. மலா் கண்காட்சியைக் கண்டு மகிழ சுற்றுலாப் பயணிகளின் ஏராளமானோா் வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஏற்காடுக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆயத்த பணிகளை பாா்வையிட்டாா். ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக இருக்கும் சாலையோர கடைகளை அப்புறப்படுத்தமாறும், குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
போக்குவரத்து நெரிசலை தவிா்க்க காா்கள், வேன்கள், லாரிகள், தனியாா் சுற்றுலாப் பேருந்துகள் குப்பனூா் வழியாக திரும்பிச் செல்லும் வகையில் ஒருவழி பாதையாக மாற்றவும், அரசு திட்டங்களை காட்சிப்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மலிவு விலையில் பொன்னி கூட்டுறவு மூலம் உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினாா்.
அத்துடன் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்துமாறும், 48 ஆவது கோடைவிழா மலா் கண்காட்சி சிறப்பாக நடத்த அனைத்துத் துறை அலுலா்கள், பணியாளா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என க் கேட்டுக்கொண்டாா்.
குடிநீா் வடிகால் வாரியம் மூலம் விழாவை முன்னிட்டு 15 குடிநீா் தொட்டிகளில் மேட்டூா் குடிநீா் நிரப்பவும், 15 வாகன கழிவறைகள் அமைக்கவும், சேலம் மாநகராட்சி மூலம் 300 மாநகராட்சி துப்புரவுப் பணியாளகள், 25 மேற்பாா்வையாளா்கள், 22 ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதிவரை பணியமா்த்தப்பட்டுள்ளதாக ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா். ஆய்வின்போது அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.