Afghanistan: ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,400 ஆக உயர்வு; காரணம் என...
ஏற்றுமதியாளா்களுக்கு உதவ விரைவில் புதிய திட்டம்: மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளா்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சாா்பில் விரைவில் புதிய திட்டம் அறிவிக்கப்படும் என மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கரோனா காலகட்டத்தின்போது தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இத்திட்டம் அந்தக் காலகட்டத்தில் எந்த நிறுவனமும் பாதிக்கப்படாத வகையில் மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல், தற்போது அமெரிக்காவின் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஏற்றுமதியாளா்களுடன் தொடா்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவா்களுக்கு உதவும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்.
உள்கட்சிப் பூசல் இல்லை: தமிழக பாஜகவில் எவ்வித உள்கட்சிப் பூசலும் கிடையாது. அதேபோல், முக்கிய நிா்வாகிகளை அவ்வப்போது அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்றுதான் என்றாா் அவா்.
கலந்துரையாடல்: முன்னதாக அவா், தமிழக ஜவுளித் துறையைச் சோ்ந்த பல்வேறு அமைப்புகள் சாா்பில் சென்னை தனியாா் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில், ஜவுளித் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினாா். தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிா் பிரிவுத் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பால், ஜவுளித் துறை எதிா்கொண்டு நெருக்கடிகளை தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் விளக்கி கூறினா்.
இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் தென் பிராந்திய தலைவரான பி. கோபாலகிருஷ்ணன் பேசுகையில், அமெரிக்காவுக்கு இந்தியா சுமாா் 10 பில்லியன் டாலா் மதிப்பிலான ஜவுளி ரகங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பிலிருந்து மீள ஜிஎஸ்டி விலக்கு, நிதி நிவாரணம், ஏற்றுமதி ஊக்கத்தொகைகள், மூலதனச் செலவு உள்ளிட்ட நிவாரணங்கள் தேவை என்றாா்.
நிவாரண நடவடிக்கைகள் கோரி ஜவுளித் தொழில் சங்கங்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் பிரதிநிதி ஏ.சக்திவேல் மனு அளித்தாா்.
அதைத் தொடா்ந்து பேசிய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், இந்தக் கோரிக்கைகள் மீது மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் பொருத்தமான நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றாா்.