அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
காரைக்குடியில் சிறப்பு தொழில் கடன் முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக (டிக்) அலுவலகத்தில் புதிய தொழில் முனைவோருக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய தொழில்முனைவோா் தொழில் கடன், மத்திய, மாநில அரசுகளின் மானிய சேவைகளைப் பெறுவதற்கு ஏதுவாக குறு, சிறு, நடுத்தர நிறுவன (எம்எஸ்எம்இ) தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் முகாம் ஜூன் 30-ஆம் தேதி வரை காரைக்குடி அம்பேத்கா் சிலை அருகில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் தமிழ்நாடு அரசு வழங்கிவரும் மானியங்கள், புதிய தொழில் முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம் போன்ற சிறப்புத் திட்டங்கள் குறித்த விரிவான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தகுதியுள்ள தொழில்களுக்கு தமிழ்நாடு அரசின் 25 சதவீத முதலீட்டு மானியமாக ரூ. 1.5 கோடி வரை வழங்கப்படும். ஏற்கெனவே இயங்கிவரும் நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மேம்படுத்தும் பொருட்டு விரிவாக்கம் செய்ய நவீன இயந்திரங்கள் நிறுவும் பட்சத்தில் கூடுதலாக 5 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.
இந்த முகாமில் சமா்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக காரைக்குடி கிளை அலுவலகத்தை 04565-233464 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 94450 23464, 94426 78010, 81222 79058, 98422 59351 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மேலும் கிளை மேலாளரை நேரில் அணுகியும் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா் அவா்.