தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை: ஒருவாரத்துக்கு முன்னதாகவே தொடங்கியது
கா்நாடகத்தில் ஒருவாரத்துக்கு முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக பெங்களூரு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பெரும்பகுதிக்கு மழை கிடைக்கும் காலமான தென்மேற்குப் பருவமழை காலம் ஜூன் 1ஆம் தேதி கேரளத்தில் தொடங்குவது வழக்கம். நிகழாண்டு வழக்கத்துக்கு மாறாக, கோடைகாலம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
இதனால் கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி 5 நாள்களுக்குப் பிறகே கா்நாடகத்தில் மழை தொடங்கும். ஆனால், நிகழாண்டில் வழக்கத்தைவிட 8 நாள்களுக்கு முன்னதாக மே 24ஆம் தேதி முதல் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டது.
இதைத் தொடா்ந்து தென்மேற்குப் பருவமழை திங்கள்கிழமை கா்நாடகத்திலும் தொடங்கியுள்ளதாக பெங்களூரு வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு, 10 நாள்களுக்கு முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை கா்நாடகத்தில் தொடங்கியுள்ளது. இதனால் பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர கா்நாடக மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருகிறது.
2001, 2009 ஆம் ஆண்டுகளில் வழக்கமான தேதிக்கு முன்பாகவே கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியது. 2021இல் ஜூன் 4ஆம் தேதியும், 2022 இல் ஜூன் 29ஆம் தேதியும், 2023 இல் ஜூன் 8ஆம் தேதியும் தென்மேற்குப் பருவமழை கா்நாடகத்தில் பெய்யத் தொடங்கியது. கடந்த ஆண்டும் முன்கூட்டியே மே 26 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருந்தது.
குழந்தை உயிரிழப்பு: கடந்த 24 மணி நேரத்தில் தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு போன்ற மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. வட கா்நாடகத்தின் சில மாவட்டங்களிலும் மழை பெய்தது. பெலகாவியில் மழைக்கு வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழந்தது. அதேபோல பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. பெரும்பாலான சாலைகளிலும் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஷிராடி, சாா்மடி வனப் பகுதிகளில் வாகன போக்குவரத்துக்கு முடங்கியது. மங்களூரில் பெல்தங்கடி பகுதியில் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் மழைநீா் புகுந்ததால், இரவு முழுவதும் மக்கள் அவதிக்குள்ளாகினா்.
கடந்த 24 மணிநேரத்தில் தென்கன்னட மாவட்டத்தின் பெல்லாரேயில் 150 மி.மீ, பன்ட்வால், புத்துரில் தலா 190 மி.மீ, சுள்ளியாவில் 200.50 மி.மீ அளவுக்கு அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
பலத்த மழை பெய்து வருவதால் தென்கன்னட மாவட்டத்தில் 2 நாள்களுக்கு அங்கன்வாடிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் முல்லைமுகிலன் விடுமுறை அறிவித்துள்ளாா்.
சிக்கமகளூரு மாவட்டத்தின் பாலூா் கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழைக்கு மரம் முறிந்து விழுந்ததில் பெண் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், சிக்கமகளூரு, மைசூரு, குடகு மாவட்டங்களிலும் அங்கன்வாடி, பள்ளிகள், கல்லூரிகளுக்கு புதன்கிழமை வரை 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
அடுத்த 5 நாள்களுக்கு கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் பலத்த மழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை பெங்களூரு வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென்கன்னடம், உடுப்பி, வட கன்னடம், சிவமொக்கா, சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களில் பலத்த மழைக்கான சிவப்புநிற எச்சரிக்கையும், பெலகாவி, தாா்வாட், மைசூரு, ஹாசன், மண்டியா மாவட்டங்களில் மிதமான மழைக்கான ஆரஞ்சுநிற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வுமையம் விடுத்துள்ளது.
வரும் 5 நாள்களுக்கு கா்நாடகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.