Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
கீரனூா் பாறைக் குழியிலும் குப்பை கொட்ட எதிா்ப்பு: வாகனங்கள் முற்றுகை
திருப்பூா் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கீரனூரில் உள்ள பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகனங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில், தினமும் சுமாா் 700 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேகரிக்கப்படுகிறது. மாநகராட்சிக்கு என குப்பை கொட்டுவதற்கு பிரத்யேக இடமில்லாத நிலையில், ஆங்காங்கே காலியாக உள்ள பாறைக்குழிகளில் குப்பைகளை கொட்டி நிரப்பி வருகின்றனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளை கொட்டி வந்த நிலையில் அங்குள்ள மக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
அதைத் தொடா்ந்து தற்போது, காங்கயம் அருகே கீரனுாா் ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபாளையம் கிராமத்தில் உள்ள பாறைக் குழியில் குப்பை கொட்ட தொடங்கியுள்ளனா். இதற்கு ஊா் மக்கள், விவசாய அமைப்பினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து, அங்கு வந்த வாகனங்களை முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் முகிலன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணா்வு அணி மாநிலச் செயலா் சதீஷ்குமாா், காங்கயம் ஒன்றியப் பொறுப்பாளா் சிவசாமி ஆகியோா் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மேயா் என்.தினேஷ்குமாா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூா் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் இல்லாததால், கடந்த 3 ஆண்டுகளாக பாறைக் குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு நிலத்தடி நீா் வெகுவாக மாசுபடுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே நெருப்பெரிச்சல், காளம்பாளையம், பூண்டி, அம்மாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது காங்கயம் அருகே கீரனூா் ஊராட்சிக்கு உள்பட்ட ராசிபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனா். இதற்கு ஊா் மக்கள், விவசாய அமைப் பினா் பலரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
பயன்பாட்டில் இல்லாத பாறைக் குழிகளில் விஷத்தன்மை வாய்ந்த குப்பைகளை கொட்டுவதால் அருகிலுள்ள பகுதிகளில் பெரும் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. பாறைக் குழிகளை நீா் சேகரிப்பு மையமாகவோ, நீரைத் தேக்கிவைக்கும் இடமாகவோ அல்லது நிலத்தடி நீரை செறிவூட்டும் இடமாகவோ மட்டுமே பயன்படுத்த வேண்டுமென்ற விதி உள்ளது.
இந்நிலையில் காலியாகவுள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்டப்படுவதால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, இப்பிரச்னையில் உரிய முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனா்.