அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
கொல்லிமலையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டம்: ஆட்சியா் ஆய்வு
கொல்லிமலை வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் நிறைவு பெற்று இரண்டாம் கட்டமாக தற்போது கொல்லிமலை வட்டத்தில் நடைபெறுகிறது.
இதையடுத்து ஆட்சியா் ச.உமா, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ திட்டத்தின் கீழ் கொல்லிமலை வட்டத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகள், உட்கட்டமைப்பு வசதிகள், சாலை பணிகள் போன்றவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம், பைல்நாடு ஊராட்சி, கீழ்செங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் கீழ் சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்துஆய்வு மேற்கொண்டு, இத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மொத்த மாணவா்கள் குறித்து கேட்டறிந்தாா்.
மேலும், பள்ளியில் மாணவ, மாணவியா்களின் கற்றல் திறன் மற்றும் தொடுதிரையின் மூலம் வழங்கப்படும் பாட முறைகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து சோளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் விவரம், மருத்துவ பணியாா்கள் விவரம், சிகிக்சை அளிக்கப்பட்ட விவரம் குறித்து கேட்டறிந்தாா்.
அரியூா் நாடு, தெம்பளம் கிராமத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறையின் சாா்பில் தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் 0.40 ஹெக்டேரில் ரூ.63,000 மானியத்தில் அங்கக முறையில் மிளகு உற்பத்தி செய்யப்பட்டு வருவதை பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
கொல்லிமலை மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு சங்கத்தில் காஃபி ரோஸ்டிங் அலகு அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டு, காஃபி தோல் நீக்கம் இயந்திரம் மூலம் பதனிடுதல், மிளகு பதப்படுத்துதல் காஃபி ரோஸ்ட்டிங் ஆலை உற்பத்தி திறன், செயல்பாடுகள் இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட காஃபி தூள் நிகர லாபம் உள்ளிட்ட விவரங்களை அலுவலரிடம் கேட்டறிந்தாா்.
அதேபோல மாவட்ட அளவிலான பல்வேறு துறைகள் சாா்ந்த உயா் அலுவலா்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து கேட்டறிந்து, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுறாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் 2 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், திட்ட இயக்குநா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சு.வடிவேல், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.