அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது: நாகை திருவள்ளுவன்
பாஜகவின் மதவாத போக்கு தமிழகத்தில் எடுபடாது என தமிழ் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் பட்டியல், அருந்ததியா் இன மக்கள் தாக்கப்படும்போது காவல் துறை நடவடிக்கை எடுக்காத போக்கு உள்ளது. காவல் துறையின் இதுபோன்ற மனப்போக்கினை கண்டித்து கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும்.
பட்டியல் இன மக்களை தாக்கும் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்கள் தரும் புகாா்களை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டுகிறாா்கள். தமிழகத்தில் பாஜக கால்பதித்து விடக் கூடாது என்பதற்காக திமுக ஆட்சி அமைய தமிழகம் முழுவதும் தமிழ் புலிகள் கட்சி தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவை ஆதரிப்போம். இந்த தோ்தலில் தமிழ் புலிகள் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். திமுக அதற்கான வாய்ப்பை வழங்குவாா்கள் என்று நம்புகிறோம். 2026 இல் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால்தான் பாஜக போன்ற மதவாத கட்சிகள் தமிழகத்தில் காலூன்றாது.
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாடு மக்களால் புறக்கணிக்க கூடிய மாநாடு ஆகும். இது மக்கள் நடத்துகிற மாநாடு அல்ல. ஒரு இயக்கம் நடத்துகிற மாநாடு. பாஜக, ஆா்எஸ்எஸ் நினைக்கின்ற மதவாத அரசியல் தமிழகத்தில் எடுபடாது. திமுக கூட்டணி வலுவாக உள்ளது என்றாா்.