தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து அபாயம்!
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரங்களில் அபாயகரமான விளம்பரப் பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் உள்ளிட்ட பகுதிகளில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயத்தை ஏற்படுத்த கூடிய அளவில் பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து விபத்துகள் ஏற்படும் முன் விளம்பரப் பதாகைகள் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பல்லடம் சமூக ஆா்வலா் கூட்டமைப்புத் தலைவா் அண்ணாதுரை வெள்ளிக்கிழமை கூறியதாவது: தமிழ்நாட்டில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையிலான விளம்பரப் பதாகைகள் வைக்கக் கூடாது என நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்து இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் முறையாக செயல்படுத்துவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை, லட்சுமி மில் பகுதியில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 20-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான விளம்பரப் பதாகைகள் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லட்சுமி மில்லில் இருந்து காரணம்பேட்டை வரை சாலையின் இருபக்கமும் மிகப்பெரிய பேனா்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்த பகுதியில் பாலக்காட்டு கனவாய் காற்று வேகமாக வீசுவதால் பேனா்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பூா் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விளம்பரப் பதாகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.