சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில், திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் கோட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மணிகண்டன், மாவட்டத் தலைவா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கண்களில் கருப்புத் துணிக் கட்டியபடி சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். உயா்நீதிமன்ற தீா்ப்புக்கு முக்கியத்துவம் அளித்து சாலைப் பணியாளா்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.