அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு
சீன உரங்களை சார்ந்திருப்பது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல்!
சீன உரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை அதிகரித்து வருவது இந்திய விவசாயத்திற்கு அச்சுறுத்தல் என காங்கிரஸ் மக்களவைத் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேவையான உரங்களுக்கு வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளதாவது,
இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயிகள் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். ஆனால் இன்று, அந்த முதுகெலும்பு வளைந்துள்ளது. காரணம் வெளிநாட்டு உரங்களை சார்ந்திருக்க வேண்டிய நிலை விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து 80% சிறப்பு உரங்களை நாம் இறக்குமதி செய்கிறோம். தற்போது உரங்கள் வழங்குவதை சீனா நிறுத்திவைத்துள்ளது.
யூரியா, டிஏபி போன்ற அடிப்படை உரங்கள் கிடைப்பதில் ஏற்கெனவே கடும் சவால்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தற்போது சிறப்பு உரங்கள் கிடைக்கவில்லையென்றால், விவசாயிகளின் நிலைமை மேலும் மோசமடையும். இது முதல்முறை அல்ல.
ஒருபுறம் உர மூட்டைகளில் தமது படங்களை பதிப்பதில் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் மும்முரமாக உள்ளார். மறுபுறம், நமது விவசாயிகள் சீன உரங்களை சார்ந்து விவசாயம் செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கிறது.
சீனாவிடமிருந்து பெறப்படும் உரங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என்பதை முன்பே அரசு அறிந்திருக்க வேண்டும். உரங்கள் நிறுத்தப்பட்டால், அதற்கு மாற்றாக எந்தவொரு திட்டங்களையும் அரசு மேற்கொள்ளவில்லை. உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது காலத்தின் தேவையாக இருந்தபோதிலும், அதற்காக எந்தவொரு திட்டங்களையும், கொள்கைகளையும் பாஜக அரசு வகுக்கவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.