சூறைக் காற்றால் நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை
தொண்டி கடற்கரைப் பகுதியில் வீசி வரும் பலத்த சூறைக் காற்றால் நாட்டுப் படகுகள் மீனவா்கள் வியாழக்கிழமை கடலுக்குள் செல்லவில்லை.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி, நம்புதாலை, சோழியக்குடி, புதுப்பட்டினம், முள்ளிமுனை, காரங்காடு, உப்பூா், மோா்பண்ணை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கடற்கரைக் கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் உள்ளன. தற்போது, மீன்பிடித் தடைக் காலம் என்பதால், இந்த மீனவா்கள் மட்டுமே கடலுக்குச் சென்று மீன் பிடித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக தொண்டி கடற்கரைப் பகுதியில் பலத்த சூறைக் காற்று வீசி வருவதால், நாட்டுப் படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் வியாழக்கிழமை கரையில் நிறுத்தி வைக்கப்பட்டன. தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவா்கள் தெரிவித்தனா்.