இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
சென்னை: மனைவியைத் தன் வழிக்குக் கொண்டு வர கணவர் செய்த விபரீத செயல்; பதிலடி கொடுத்த பெண் ஐடி ஊழியர்
சென்னையைச் சேர்ந்தவர் ரம்யா (28) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் டீம் லீடராகப் பணியாற்றி வருகிறார்.
அப்போது பெங்களூருவில் உள்ள கொரியர் கம்பெனியில் சூப்பர் வைஸராக வேலை செய்து வந்த சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் (26) என்பவரை ரம்யா காதலித்து 2023-ல் திருமணம் செய்து கொண்டார்.
சில மாதங்கள் இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் ஜார்ஜ், போதைக்கு அடிமையானவர் என்பதை தெரிந்த ரம்யா அதிர்ச்சியடைந்தார். பின்னர் கணவர் ஜார்ஜைத் திருத்த ரம்யா பல வகையில் முயற்சி செய்து தோல்வியடைந்தார்.
போதை கணவரால் ரம்யா நிம்மதியிழந்தார். அதன் காரணமாக கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ரம்யாவை அவரின் கணவர் ஜார்ஜ் அடித்து துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
அதனால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ரம்யாவும் ஜார்ஜும் தனித்தனியாகப் பிரிந்து வாழத் தொடங்கினர்.

இந்தநிலையில், ரம்யாவின் வீட்டுக்குச் சென்ற ஜார்ஜ், இனிமேல் குடிக்க மாட்டேன், திருந்தி வாழ்கிறேன் என மனைவியைச் சமாதானப்படுத்தி அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கடந்த 3-7-25-ம் தேதி ரம்யாவும் ஜார்ஜும் பைக்கிலேயே குன்னூருக்கு இன்பச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள்.
பின்னர் அங்குள்ள விடுதியில் இருவரும் தங்கியிருந்தனர். அப்போது ரம்யாவைத் தன்னுடைய செல்போனில் ஜார்ஜ் நிர்வாணமாக வீடியோ, போட்டோ எடுத்து வைத்ததாகத் தெரிகிறது. கணவரின் செல்போனை எதேச்சையாகப் பார்த்த ரம்யா, தன்னுடைய நிர்வாண போட்டோ, வீடியோ ஜார்ஜின் செல்போனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அது குறித்து ஜார்ஜிடம் எதுவும் கேட்காமல் இருவரும் சென்னை திரும்பினர். சென்னை வந்ததும் தன்னுடைய கணவர் ஜார்ஜின் செல்போனைப் பிடுங்கிய ரம்யா, 'ஏன் இப்படி என்னை நிர்வாணமாக போட்டோ எடுத்து வைத்திருக்கிறீர்கள்?' எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது, 'உன்னை என் வழிக்குக் கொண்டு வரவே இப்படிச் செய்தேன்' என ஜார்ஜ் கூறியதோடு, 'என்னை மீறி நீ செயல்பட்டால் இந்த போட்டோஸ், வீடியோக்களைச் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார்.

அதனால் சுதாரித்துக் கொண்ட ரம்யா, தன்னுடைய கணவர் ஜார்ஜை வீட்டில் உள்ள ஓர் அறையில் வைத்துப் பூட்டினார். பின்னர் ஜார்ஜின் அம்மாவுக்கு போன் செய்து விவரத்தைக் கூறிய ரம்யா, போலீஸ் கட்டுப்பாட்டறைக்கும் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீஸார், ஜார்ஜை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் நிர்வாண போட்டோஸ், வீடியோக்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
அவரின் செல்போனையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். ரம்யா அளிக்கும் தகவலின்படி ஜார்ஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரவாயல் போலீஸார் தெரிவித்தனர்.