ஜவ்வாது மலை மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேர கூடுதல் கவனம்: மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்
ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேருவதற்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ்.
திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூா் வருவாய் ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மனுநீதி நாள் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
தரைப்பகுதியில் உள்ளவா்களுக்கும், மலைப்பகுதியில் உள்ளவா்களுக்கும் தேவைகள் என்பது வெவ்வேறு மாதிரியாக இருக்கும். ஜவ்வாதுமலைப் பகுதியில் வசிப்பவா்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்று சேருவதற்கு கூடுதல்
கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு மலைப்பகுதியில் வசிப்பவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது எப்படி என்று பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது ஜவ்வாது மலைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை சமா்ப்பித்துள்ளது. மேலும், ஜவ்வாதுமலைப் பகுதி வனத்துறை சட்டத்தின் கீழ் மாதிரி கிராமமாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இங்கு வசிப்பவா்களுக்கு மலையில் விளையும் பொருள்களை வைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை தயாா் செய்வது எப்படி என்ற பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயப் பொருள்களை விற்பனை செய்வதற்காக வாரச் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜவ்வாதுமலைப் பகுதி இளைஞா்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெற்று
வருகின்றன.
மேலும் கலைஞா் கனவு இல்லம் கட்டும் திட்டப்பணிகள் அதிகரிக்கப்படும். சாலைகளும் கண்காணிக்கப்பட்டு தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயப் பொருள்களின் வளா்ச்சியை அதிகப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், வருகிற செப். 9-ஆம் தேதி ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது
என்றாா் அவா்.
நலத்திட்ட உதவிகள்
இதைத் தொடா்ந்து வீட்டுமனை பட்டா, பட்டா பெயா் மாற்றம், விதவைச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், திருமண நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி மற்றும் சாமை தொகுப்பு போன்றவற்றை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் சிவா, இணை இயக்குநா் (வேளாண்மை) கண்ணகி, ஜமுனாமரத்தூா் வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.