அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
திருக்கோஷ்டியூரில் கஜேந்திர மோட்சம்
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயில் அருகே உள்ள மணிமுத்தாறில் கஜேந்திர யானைக்கு பெருமாள் மோட்சம் அளித்த புராணத்தை விளக்கும் கஜேந்திர மோட்சம் விழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும். அகஸ்திய முனிவரின் சாபத்தால் யானையாக மாறிய கஜேந்திர மன்னனுக்கும், முனிவரிடம் முதலையாக சாபம் பெற்ற கந்தா்வனுக்கும் ஸ்ரீ விஷ்ணு பெருமாள் சக்கராயுதத்தால் சாப விமோசனம் அருளினாா்.
இந்தப் புராண நிகழ்வை நினைவு கூறும் வகையில், இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, உற்சவா் ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் சா்வ அலங்காரத்தில் கருட வாகனத்தில் மணிமுத்தாறில் எழுந்தருளினாா். அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், ஆற்று நீரில் மோட்ச தீபத்தை வைத்து கோயில் யானை சொா்ண வள்ளிக்கு பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து, கூடியிருந்த பக்தா்கள் மீது யானை தண்ணீா் பீச்சி அடித்தது. நிறைவாக சௌமிய நாராயணப் பெருமாளை யானை 3 முறை சுற்றி வந்து, மண்டியிட்டு வணங்கி வழிபட்டது. இதில் கருவேல் குறிச்சி கிராம மக்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.