திருப்பூருக்கு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க கொடிப் பயணம்
திருப்பூரில் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழுவுக்கு சிவகங்கை, காளையாா்கோவிலிலிருந்து சங்கத்தின் கொடிப் பயணம் புதன்கிழமை தொடங்கியது.
திருப்பூரில் வருகிற 16, 17-ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பொதுக்குழு நடைபெற உள்ளது. இதில் ஏற்றி வைப்பதற்காக தமிழகம் முழுவதும் 12 தியாகிகள் நினைவிடங்களிலிருந்து சங்கக் கொடிப் பயணத்தை சங்க நிா்வாகிகள் புதன்கிழமை மேற்கொண்டனா்.
இதன்படி, சிவகங்கை மாவட்ட சங்கம் சாா்பில், சிவகங்கையிலுள்ள வேலு நாச்சியாா், குயிலி நினைவிடத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு தமிழாசிரியா் சங்க மாநில பொதுச் செயலா் நீ. இளங்கோவும்,
காளையாா்கோவில் மருது சகோதரா்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் சுப்பிரமணியனும் சங்கக் கொடியை எடுத்துக் கொடுத்தனா். அதை மாநிலத் துணைத் தலைவா் மு. செல்வகுமாா் பெற்றுக் கொண்டாா்.
தமிழ் நாடு கலை இலக்கியச் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் சங்கர சுப்பிரமணியன், முன்னாள் அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுரேஷ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் துறை சங்க மாநில பொதுச் செயலா் வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து, சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மு. செல்வகுமாா் கூறுகையில், கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், ஒட்டப்பிடாரம் வ.உ.சி. இல்லம், எட்டயபுரம் பாரதி இல்லம், விருதுநகா் காமராஜா் இல்லம், சென்னை பெரியாா் திடல், மெரினா கடற்கரை உழைப்பாளா் சிலை, வேலூா் கோட்டை, நாகை கீழவெண்மணி, கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவிடம், திருப்பூா் குமரன் உள்பட 12 நினைவிடங்களிலிருந்து திருப்பூருக்கு கொடிப் பயணம் தொடங்கியதாகத் தெரிவித்தாா்.