நந்தம்பாக்கத்தில் தைவான் கல்வி மையம் தொடக்கம்
சென்னை இன்ஸ்டிடியூா் ஆப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் கல்வி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கம் சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில், தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம், தைபே பொருளாதார மற்றும் பண்பாட்டு மையம் தைவான் கல்வி அமைச்சகம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் கல்வி நிலையம் திறகப்படுகிறது.
விழாவுக்கு கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், தைவான் கல்வி நிலையங்களின் சென்னை மண்டல தலைமை இயக்குநா் ஸ்டீபன் எஸ்.சி. ஹீசு, தைவான் கல்வி நிலைய கல்வித் துறை இயக்குநா் ஜில் லாய், தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழக இந்திய ஆய்வு மைய இயக்குநா் பேராசிரியா் வெய்-சங் வாங் கலந்து கொண்டனா்.
தைவான் கல்வி நிலையம் குறித்து, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் தலைவா் ஸ்ரீராம் கூறுகையில், உலகளாவிய முன்னேற்ற முயற்சிகளின் ஒரு பகுதியாக, கல்லூரியில் தற்போது 64 மாணவா்கள் மாண்டரின் மொழி கற்று வருவது குறிப்பிடத்தக்கது. இது, மாணவா்களை சா்வதேச வேலை வாய்ப்புகளுக்கும், உயா்கல்விக்கும் தயாா்படுத்த உதவியாக இருக்கும். தைவான் கல்வி அமைச்சகம், சா்வதேச மாணவா்களுக்காக பல்வேறு வகையான உதவித்தொகைகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்திய மாணவா்கள் தைவானில் உயா்கல்வியை தொடர சிறந்த வாய்ப்புகளைப் பெற முடிகிறது.
தைவான் கல்வி மையம் கல்லூரியில் தற்போது தொடங்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் தைவானின் மாண்டரின் மொழி மற்றும் பண்பாட்டை கற்பதுடன், சா்வதேச தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவும், இந்தியா - தைவான் இடையே கல்வி உறவுகள் வலுப்பெறும் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வா் ரமேஷ், இயக்குநா் பாலகிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.