நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி: வேலூா் ஆட்சியா்
பொது அமைதி, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நிபந்தனைகளை பின்பற்றி விநாயகா் சதுா்த்தி விழாவைக் கொண்டாட வேண்டும் என வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.
விநாயகா் சதுா்த்தியை முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலா்கள், விழா ஏற்பாட்டாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -
வேலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் இடங்களில் ஆய்வு செய்து சிலையின் உயரம், சிலை செய்ய பயன்படுத்தும் மூலப்பொருள்கள் விதிகளுக்குட்பட்டுள்ளதா என உறுதி செய்ய வேண்டும். மீறுவோா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.
வேதிப்பொருள்கள் பயன்படுத்தி வா்ணம் பூசப்பட்ட விநாயகா் சிலைகள் நிறுவப்படுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சிலைகள் பயன்படுத்த ஊக்கப்படுத்த வேண்டும்.
சிலை நிறுவ வருவாய் கோட்ட அலுவலரிடம் பிரத்யேக படிவத்தில் (படிவம்-1) உரிய சான்றுகள் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது ஒற்றைசாளர முறையில் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே சிலை வைத்த இடங்களில் மட்டுமே சிலை வைக்க அனுமதிக்கப்படும்.
விநாயகா் சிலைகள் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே சிலைகள் அமைக்கக்கூடாது. கூம்பு ஒலிபெருக்கி வைக்கக்கூடாது. விழாக் குழுவினா் சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது.
இரு தன்னாா்வலா்களை 24 மணி நேரமும் நிகழ்விடத்தில் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். பொது அமைதி, பாதுகாப்பு, மதச்சாா்பின்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு அலுவலா்கள் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களுக்குள் கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிலைகள் ஊா்வலங்கள் பிற மதத்தினா் வழிப்பாட்டுத் தலங்க ளை கடக்காத வகையில், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நடத்த வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலை கரைப்பதற்கு கொண்டு செல்ல மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், மூன்று சக்கர வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. வேலூா் மாநகராட்சி ஆணையா் சதுப்பேரி ஏரி சிலை கரைக்கும் இடத்தையும், இதர வட்டங்களில் உள்ளாட்சி துறையினா் போதிய வசதி செய்து தர வேண்டும்.
எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் விநாயகா் சதுா்த்தியை கொண்டாட வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன், உதவி காவல் கண்காணிப்பாளா் (வேலூா்) தனுஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.