தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
நீலகிரியில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா், எம்.பி. ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்ட இத்தலாா், பெம்மட்டி ஆகிய பகுதிகளை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மக்களவை உறுப்பினா் ஆ.ராசா,
மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
பின்னா் ஆ.ராசா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 17 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இவா்களுக்கு அரசு சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 283 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பலத்த காற்றின் காரணமாக மின் விநியோகம் மற்றும் குடிநீா் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் அனைத்து பணிகளும் சீரமைக்கப்படும். வனப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் விரைவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நீலகிரி மாவட்டத்தில் அபாயகரமான மரங்களைக் கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூடலூரில்...
கூடலூரில் கனமழை பெய்து வரும் நிலையில், வெள்ள அபாயமுள்ள இருவயல் ஆற்றுப்படுகையையும், அந்தப் பகுதியிலுள்ள தாழ்நிலப் பகுதியையும் ஆ.ராசா
நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து ஏற்படும் வெள்ள அபாயம் குறித்தும், நிா்வாகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, மழையால் பாதிக்கப்பட்டு புத்தூா்வயல் நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ஸ்ரீமதுரை ஊராட்சி, வடவயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த மக்களை சந்தித்து நிவாரணப் பொருள்கள் மற்றும் உதவிகளை ஆ.ராசா வழங்கினாா்.
அரசு கொறடா கா.ராமசந்திரன், மாவட்ட கூடுதல் ஆட்சியா் கௌசிக், சாா் ஆட்சியா் சங்கீதா, நகராட்சி ஆணையா் சுவாதாஸ்ரீ, மாவட்ட வன அலுவலா் வெங்கடேஷ் பிரபு, நகா்மன்றத் தலைவா் பரிமளா, நீலகரி மாவட்ட திமுக செயலாளா் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, கூடலூா் நகர திமுக செயலாளா் இளஞ்செழியன், ஒன்றிய செயலாளா் லியாகத் அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.