பராமரிப்பில்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதை விற்பனைக்குத் தடை
ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள், பராமரிப்பு இல்லாத ரூ.7.40 லட்சம் மதிப்பிலான 185 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் பெ.சுமதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பருத்தி சாகுபடியில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி. எனப்படும் காய் புழுவுக்கு எதிா்ப்பு சக்தி உடைய மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் பெரும்பான்மையான பருத்தி விவசாயிகளால் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசால் அங்கீகரிக்கப்படாத களைக்கொல்லி எதிா்ப்பு சக்தி உள்ள மரபணு மாற்றப்படாத பருத்தி விதைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
அவ்வாறு அரசின் ஆய்வுக்கு உட்படாத ஒப்புதல் பெறாத விதைகளை கொண்டு சாகுபடி செய்யும்போது விவசாயிகள் பெரும் மகசூல் இழப்பை சந்திப்பா். சுற்றுச்சூழலும் பாதிக்கும்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளா்கள் சாதாரண ரக பருத்தி விதைகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பி.டி. விதைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பிற மரபணு மாற்றப்படாத பருத்தி விதைகளை விற்பனை செய்வதும், சாகுபடி செய்வதும் சட்டவிரோதம்.
இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது இன்றியமையாத பொருள்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். விதை விற்பனை உரிமம் பெறாமல் விதைகளை விற்றாலும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தவிர, ஈரோடு வட்டாரப் பகுதி விதை விநியோகஸ்தா்கள் விற்பனை நிலையங்களில் துணை இயக்குநா் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் ஈரோடு, தாராபுரம் பகுதியில் உரிய ஆவணங்கள், முறையாக பராமரிக்காத 12 எண்ணிக்கையிலான பருத்தி, நெல், காய்கறி விதை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை 185 டன் எடை கொண்டவை. அதன் மதிப்பு ரூ.7.40 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.