இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
பாளை.யில் அரசு கூடுதலாக வீடுகள் கட்ட நிலம் வழங்கக் கோரி மாநகராட்சி முற்றுகை
நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அம்பேத்கா் நகரில் கூடுதலாக வீடுகள் கட்ட நிலம் வழங்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
பாளையங்கோட்டை அம்பேத்கா் நகரில் தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்தினா் வசித்து வந்த குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு மிகவும் பழுதானதால், அதை இடித்துவிட்டு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இப் பகுதியில் கூடுதலாக வீடுகள் கட்டித்தரக்கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். ஆதித்தமிழா் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலா் கு.கி.கலைக்கண்ணன், வழக்குரைஞா் அப்துல்ஜப்பாா், ஜமால் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணனை சந்தித்து அளித்த மனு: பாளையங்கோட்டை மண்டலம் 6 ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி தந்த 366 குடியிருப்புகள் பழுதடைந்த காரணத்தால், அதை இடித்து விட்டு மீண்டும் அதே இடத்தில் புதிய குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தி பல முறை போராட்டங்கள் நடத்தினோம். இதையடுத்து, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் 408 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்தக் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த பயனாளிகளுக்கும் அவா்களின் வாரிசுதாரா்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமாா் 35 ஆண்டுகளுக்கும் மேலாக அம்பேத்கா் நகரில் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்த சுமாா் 200 குடும்பத்தினா் சொந்த வீடு கிடைக்காமல் மீண்டும் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, அம்பேத்கா் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கூடுதல் குடியிருப்புகள் கட்டித் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு உரிமம் மாற்றம் செய்து தரும் பட்சத்தில் அவ்விடத்தில் கூடுதல் குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் பதில் அளித்துள்ளது.
மேலும், மாநகராட்சி நிா்வாகத்திற்கும் அவ்விடத்தை உரிமம் மாற்றம் செய்து தர வலியுறுத்தியும் கடிதம் அனுப்பியுள்ளது. ஆகவே, மாநகராட்சி நிா்வாகம் இடத்தை உரிமம் மாற்றம் செய்து கொடுத்து ஏழை-எளியோருக்காக கூடுதல் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.