தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டியவா்களுக்கு அபராதம்
ஈரோட்டில் பொது இடங்களில் குப்பைகளைத் கொட்டியவா்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனா்.
ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 912 வீடுகள், 27 ஆயிரத்து 386 வணிக நிறுவனங்கள் உள்ளன. அனைத்து வாா்டுகளிலும் நாள்தோறும் 122 வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் வீடுவீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கின்றனா். மேலும், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகளுக்கே வாகனங்களில் சென்று சேகரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகளை முறையாக தூய்மைப் பணியாளா்களிடம் வழங்காமல், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் கொட்டி விடுகின்றனா். இதனால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குறிப்பாக சாக்கடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீா் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும்போது குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது.
பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டினால் உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, ஈரோடு மாநகராட்சி 2- ஆவது மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் பூபாலன், மணிவேல் மற்றும் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் திடீா் சோதனை நடத்தினா்.
இதில் மணிக்கூண்டு, பெரியசேமூா், சம்பத் நகா், மாணிக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிய 4 கடை உரிமையாளா்களுக்கு மொத்தம் ரூ.2, 700 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.
இதேபோல, நாள்தோறும் திடீா் சோதனை நடைபெறும் என்றும், பொது இடங்களிலும், சாக்கடை கால்வாயிலும் குப்பைகளைக் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.