தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
போடி அருகே காா்கள் மோதல்: முன்னாள் அமைச்சரின் உறவினா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், போடி அருகே செவ்வாய்க்கிழமை 2 காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் உறவினா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கலைச் சோ்ந்த சங்கரபாண்டி மகன் அருண் (47), இவரது மனைவி சத்தியபாமா (40), மகன் ரஜித் பாலாஜி (17), மகள் சரண்யா (12) ஆகியோா் காரில் கேரளத்துக்கு சுற்றுலா சென்றிருந்தனா். அங்கிருந்து போடிமெட்டு மலைச் சாலை வழியாக ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா். போடி முந்தல் மலை கிராமம் வனத் துறை சோதனை சாவடி அருகே வந்தபோது, எதிரில் போடியிலிருந்து கேரளத்துக்கு சென்ற மற்றொரு காருடன் நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அருண், சத்தியபாமா, மற்றொரு காரில் வந்த கேரள மாநிலம் கோவிலூரில் வசிக்கும் முனியாண்டி மனைவி ஜோதி (62) ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் போடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், அருண் உயிரிழந்தாா். சத்தியபாமா, ஜோதி ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
விபத்தில் அருண் மகன் ரஜித் பாலாஜி, சரண்யா, மற்றொரு காரில் வந்த முனியாண்டி, அருண் வந்த காரின் ஓட்டுநா் காளிதாஸ் ஆகியோரும் லேசான காயமடைந்தனா்.
விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். இறந்த அருண், முன்னாள் அதிமுக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் அக்காள் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.