திமுக கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் விலகாது: கே.வீ. தங்கபாலு
மதுரை ஆதீனத்துக்கு முன்பிணையை ரத்து செய்யக் கோரி காவல் துறை மனு
விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு மதத்தினா் இடையே மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாகக் கூறி மதுரை ஆதீனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு அளித்த புகாரின்பேரில், மதுரை ஆதீனத்துக்கு எதிராக 4 பிரிவுகளில் சென்னை மாநகர இணையக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில் மதுரை ஆதீனத்துக்கு நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே, மதுரை ஆதீனம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதால், முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி காவல்துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால், ஆதீனத்துக்கு வழங்கப்பட்ட முன்பிணையை ரத்து செய்ய வேண்டும் என கோரினாா்.
இதையடுத்து நீதிபதி, இந்த மனுவுக்கு மதுரை ஆதீனம் வருகிற ஜூலை 30-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.