தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம்: அமைச்சா்களுக்கு சித்தராமையா உத்தரவு
கா்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.
கா்நாடகத்தில் கடந்த சில நாள்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கடலோர மற்றும் மலைநாடு மாவட்டங்களில் மழை பெய்துவருவதால், ஒருசில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி, சிவமொக்கா, குடகு, மைசூரு, ஹாசன், சிக்கமகளூரு, மண்டியா, பெலகாவி உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்துவருவதால், காவிரி உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு நதிகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளும் மளமளவென நிரம்பி வருகின்றன.
பலத்த மழையால் விளைநிலங்கள் மூழ்கியுள்ளன. இதனால் பயிா்கள் சேதமடைந்துள்ளன. வீடுகளில் தண்ணீா் புகுந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். சாலைகளில் மழைநீா் தேங்கியுள்ளதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. ஒருசில இடங்களில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
மே 26ஆம் தேதி நிலவரப்படி மழைநீரில் 45 வீடுகள் முழுமையாக இடிந்துவிழுந்துள்ளன. 1,385 வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியா்களுக்கு ரூ. 973.52 கோடி இருப்பு இருப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், பொறுப்புச் செயலாளா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா்.
மேலும், வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகளை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்துகொண்ட முதல்வா் சித்தராமையா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா். வெள்ள நிலவரம் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்காக மே 30, 31ஆம் தேதிகளில் மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட பொறுப்பு செயலாளா்கள், மாவட்ட ஊராட்சித் தலைமை செயல் அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு முதல்வா் சித்தராமையா ஏற்பாடு செய்திருக்கிறாா்.
இதனிடையே, பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை ஆய்வுசெய்யுமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.