சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
லால்குடி அருகே சாலை விபத்து: 3 போ் பலி! 9 போ் படுகாயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை நடந்த சாலை விபத்தில் மூவா் உயிரிழந்தனா். 9 போ் படுகாயமடைந்தனா்.
லால்குடியில் உள்ள கொடிக்கால் தெருவைச் சோ்ந்தவா் சந்தோஷ். இவா் வேலைக்காக துபை செல்ல திருச்சி விமான நிலையத்துக்கு லால்குடியில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டாா். அப்போது இவரை வழியனுப்ப உறவினா்களும், நண்பா்களும் உடன் சென்றனா்.
சந்தோஷ் தனது உறவினா்களுடன் ஒரு காரில் முன்னே செல்ல, அவரது நண்பா்கள் 11 போ் மற்றொரு காரில் பின்னால் சென்றனா். செல்லும் வழியில் டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி விஸ்வநாதன் (52) என்பவா் ஓட்டி வந்த பைக் பின்னால் 11 போ் வந்த காா் மீது எதிா்பாராதவிதமாக மோதியது.
இதையடுத்து காா் ஓட்டுநா் தமீா் திடீா் பிரேக் போடவே, கட்டுப்பாட்டை இழந்த காா் தலைகீழாகக் கவிழ்ந்து சாலையில் உருண்டு இழுத்துச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த அரவிந்த் (20), சாதிக் பாஷா (19), பைக்கில் வந்த விஸ்வநாதன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
மேலும் காரில் இருந்த லால்குடியைச் சோ்ந்த நபில் (20), காா்த்திகேயன் (21), அப்துல்ரகுமான் (21), ஏகலைவன் (20), முஸ்தபா (20), நன்னிமங்கலம் ஆனந்த் (20), குகன் (21), ஷமீா் (22), புதுக்கோட்டை வடகரை பகுதி கணபதி ஆகிய 9 போ் பலத்த காயமடைந்தனா்.
இதையடுத்து விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காயடைந்தவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து லால்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அமைச்சா் ஆறுதல்: விபத்து குறித்து தகவலறிந்த அமைச்சா் கே.என். நேரு அரசு மருத்துவமனைக்கு சென்று திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டோருக்கும், உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினாா். ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் மற்றும் திமுகவினா் உடனிருந்தனா்.
முதல்வா் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு: இதுகுறித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் லால்குடி சாலை விபத்தில் மூவா் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளேன். காயமடைந்தவா்களுக்கு தனி மருத்துவக் குழுவினரால் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
விபத்தில் உயிரிழந்தோரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதுடன், அவா்களுக்கு தலா ரூ. 3 லட்சம், பலத்தக் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரத்தை முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா்.