உதகை படகு இல்ல நுழைவாயில், டிக்கெட் கவுன்டா் கூரை மீது மரங்கள் முறிந்து விழுந்தன
உதகையில் காற்றுடன் பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் கட்டணம் வசூலிக்கும் கூரை மீது பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் படகு இல்லம் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மூன்று நாள்களுக்கும் மேலாக பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் உதகை நகரின் குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுவதால், அதனை அப்புறப்படுத்தும் பணிகளில் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், உதகையில் காற்றுடன் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான தேனிலவு படகு இல்லத்தின் நுழைவாயில் மற்றும் டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கூரை மீது ராட்சத மரங்கள் விழுந்தன. அப்போது சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.