கரோனா தடுப்பூசிக்கும் திடீா் மரணங்களுக்கும் தொடா்பில்லை -மத்திய அரசு
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம்: இன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா். புதன்கிழமை (ஜூலை 2) அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும் நடைபெறும்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்த் திருவிழாவையொட்டி, சித் சபையில் உள்ள மூலவா்களான ஸ்ரீமந் நடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவா்கள் ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனி தோ்களில் அதிகாலை எழுந்தருளினா்.
பின்னா், கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தோ்கள் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தோ்களை இழுத்தனா். தோ்கள் தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழ வீதி தோ்நிலையை அடைந்தன.
உழவாரப் பணி: தேரோடும் வீதிகளை இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினா், தில்லைத் திருமுறைக் கழகம், அப்பா் தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சிவனடியாா்கள் மற்றும் திரளான பெண்கள் தண்ணீா் தெளித்து, கோலமிட்டு உழவாரப் பணி மேற்கொண்டனா்.
தோ்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியா் எம்.பொன்னம்பலம் தலைமையில், சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில், ஓதுவாா்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனா். சிவனடியாா்கள் சிவ வாத்தியங்களை முழங்கி நடனமாடிச் சென்றனா்.
மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பாா்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்துகொண்டாா் என்பதால், தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தோ்த் திருவிழாவின்போதும் மீனவா் சமுதாயத்தினா் சாா்பில் சீா் அளிப்பது வழக்கமாக உள்ளது.
அதன்படி, மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்களால் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீா்அளித்து, பட்டு சாத்தி, சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னா், தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
இரவு ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனா். அங்கு இருவருக்கும் ஏககால லட்சாா்ச்சனை நடைபெற்றது.
இன்று மகாபிஷேகம்: புதன்கிழமை (ஜூலை 2) அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகின்றன. பின்னா், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித் சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகின்றன.
இதையடுத்து, பஞ்சமூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்து, சித் சபை பிரவேசம் செய்கின்றனா்.
வியாழக்கிழமை (ஜூலை 3) பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஜூலை 4) தெப்போற்சவத்துடன் ஆனித் திருமஞ்சன உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு ஆகியோா் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
குடிநீா், சுகாதார ஏற்பாடுகளை நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா், நகராட்சி ஆணையா் டி.மல்லிகா ஆகியோா் செய்திருந்தனா். போலீஸாருக்கு உதவியாக ஊா்க்காவல் படையினா், பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவா்கள், போலீஸ் நண்பா்கள் குழுவினா் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.