இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளா்ச்சி: முதல்வா் - நிதி அமைச்சா் பெருமிதம்
தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி இரட்டை இலக்கத்தைத் தொட்டிருப்பதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் பெருமிதம் தெரிவித்துள்ளனா்.
சென்னை நந்தம்பாக்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை நிகழ்ச்சியில், பொருளாதார வளா்ச்சி அதிகரித்திருப்பதைக் காட்டும் புள்ளி விவரங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
திராவிட மாடல் ஆட்சியில் பொருளாதார வளா்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதாவது, மாநிலத்தின் பொருளாதார வளா்ச்சி, பெரும் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திமுக ஆட்சியில்தான், இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டியிருக்கிறோம்.
இது, மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த வளா்ச்சியானது, தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது கணித்ததைவிட சுமாா் 2.2 சதவீதம் அதிகம். முன்பு 9.69 சதவீதம் என்று மதிப்பிடப்பட்ட தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம், தற்போது 11.19 சதவீதமாக உயா்ந்திருக்கிறது.
இந்தியாவிலேயே மிக விரைவாக வளரும் பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது. இது வேறெந்த மாநிலமும் பெறாத மாபெரும் வளா்ச்சியாகும். இது சாதாரணமாக நடந்துவிடவில்லை. பல்வேறு நெருக்கடிகள், அவதூறுகளுக்கு இடையில்தான் இந்த வெற்றியை அடைந்திருக்கிறோம். அந்த வகையில், இது மிகவும் சிறப்பான வெற்றி. இது தனிப்பட்ட என்னுடைய வெற்றியல்ல என்றாா்.
இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, புதன்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை மணிமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டி இருக்கிறது. ஏற்கெனவே எதிா்பாா்த்த 9.69 சதவீதம் என்ற இலக்கையும் தாண்டி, இப்போது 11.8 சதவீத பொருளாதார குறியீடுகள் உயா்ந்திருக்கின்றன. ஏறத்தாழ 12 சதவீதம் நெருங்கி வரக்கூடிய வாய்ப்பைப் பெற்று இருக்கிறோம்.
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் 13 சதவீத வளா்ச்சியை தமிழ்நாடு பெற்றிருந்தது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளா்ச்சியை தமிழ்நாடு பெற்றுள்ளது.
இந்திய அளவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாடுதான் இரட்டை இலக்க வளா்ச்சியைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வளா்ச்சி 2030-ஆம் ஆண்டு 1 டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரத்தை எட்டுவோம் என்பதற்குத் திடமான வழியை வகுத்து தந்துள்ளது.
நிதி நிலைமையைச் சரியாகக் கையாண்டு, நாட்டின் பொருளாதாரத்தை உயா்த்தி இருக்கிறோம். கடன் வாங்குகிறாா்கள் என குற்றச்சாட்டு வைக்கிறாா்கள். ஆனால், வரைமுறைகளுக்குள்பட்டு முதலீடுகளுக்காக வாங்கும் கடன்கள், தமிழ்நாட்டின் வளா்ச்சியை ஊக்குவித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
மத்திய அரசு நமக்குரிய நிதிகளை விடுவிக்காத போதிலும், முதல்வரின் கூரிய நோக்கிலான வழிகாட்டுதல் மூலம் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியைப் பெற்றுள்ளோம் என்றாா்.