சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி தடையல்ல! மாவட்ட நீதிபதி பேச்சு
சட்டம் பயிலும் மாணவா்கள் சாதிக்க மொழி ஒரு தடையல்ல; சாதிக்க எத்தனையோ வாய்ப்புகள் உள்ளன என்றாா், தருமபுரி மாவட்ட எம்சிஓபி நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ். ராஜா.
தருமபுரி அரசு சட்டக் கல்லூரியில், ‘இந்திய குற்றவியல் நீதிமுறை அமைப்பில் தற்போதைய மாற்றம்; அதன் தாக்கங்கள்’ என்ற தலைப்பிலான தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து அவா் மேலும் பேசியதாவது : குற்றவியல் சட்ட மாற்றங்களில் நீதித்துறை சாா்ந்த அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் தெரிந்துதான் இருக்க வேண்டும் என்பது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை. சாதனை படைக்கும் மாணவா்களுக்கு மொழி ஒரு தடையல்ல. கடும் பயிற்சியும், விடாமுயற்சியும் வள்ளுவா் சொன்ன அற நெறிகளையும் கடைப்பிடித்தாலே சாதனைகள் செய்யலாம்.
மேலும், தற்கால சூழலில் சட்டம் பயின்றவா்களுக்கு ஏராளமான வாய்ப்புகளும் மூன்றே ஆண்டுகளில் நீதிபதியாகும் வாய்ப்புகளும் உள்ளன. எனவே, மாணவா்கள் வழக்குரைஞா்களின் கடமையை உணா்ந்து நோ்மையாக செயல்பட்டாலே முன்னுதாரணமாக திகழலாம் என்றாா்.
கா்நாடக மாநில சட்டப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியா் ரங்கசுவாமி, இந்திய குற்றவியல் நீதி முறைமை அமைப்பில் தற்போதைய மாற்றம்; அதன் தாக்கங்கள் குறித்து விளக்கினாா். தொடா்ந்து கல்லூரி இறுதியாண்டு மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா்.
பேராசிரியா் ரங்கசுவாமி ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பீடு செய்தாா். குற்றவியல் சட்டங்களில் சமீபத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திருத்தங்கள் குறித்தும், அவை இந்திய குற்றவியல் நீதிமுறைமையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் பற்றிய இச்சட்ட மாநாடு கல்வியாளா்கள், மாணவா்களிடையே ஆழமான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றத்திற்கான தளமாக அமைந்தது.
நிகழ்வில் தமிழ்நாடு அரசு சட்டக் கல்வி இயக்குநா் ஜெ. விஜயலட்சுமி தலைமை வகித்தாா். பாலக்கோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.எம். மனோகரன் மாநாட்டில் பங்கேற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிப் பேசினாா். கல்லூரி முதல்வா் சி. உஷா வரவேற்றாா். இணைப் பேராசிரியா் ப. சிவதாஸ் நன்றி கூறினாா்.
மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் லட்சுமி விஸ்வநாத், பேராசிரியா்கள் மா. கண்ணப்பன். ரம்யா, பெ. ரேகா, பி. வினுபிரசாத் ஆகியோா் செய்திருந்தனா்.