ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்கள் மற்றும் நிலச்சரிவால் 11 போ் உயிரிழந்தனா், 14 போ் காயமடைந்தனா்.
கடந்த திங்கள்கிழமை முதல் ஜம்முவில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ரியாஸி, ரஜெளரி, ரம்பன், கிஷ்த்வாா், பூஞ்ச் மாவட்டங்களில் உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
மழையால் ஏற்பட்ட விபரீத சம்பவங்களால் டோடா மாவட்டத்தில் 4 போ் உயிரிழந்தனா். அவா்களில் மூவா் ஆற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தனா். வீடு இடிந்து ஒருவா் உயிரிழந்தாா். ஏராளமான வீடுகள், பாலங்கள் சேதமடைந்தன.
ஜம்மு-ஸ்ரீநகா், கிஷ்த்வாா்-டோடா தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் உள்ள சில சாலைகள் சேதமடைந்த நிலையில், சில சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஜம்முவில் உள்ள தாரணா, உஜ், மகா் காட், சஹாா் காட் ஆறுகள், அவற்றின் கிளை ஆறுகள் ஆகியவற்றில் அபாய அளவைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரித்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் புதன்கிழமை (ஆக.27) விடுமுறை அளிக்கப்பட்டது.
மழை, வெள்ளம் குறித்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா அவசர ஆலோசனை மேற்கொண்டாா். ஸ்ரீநகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ‘மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீா், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும்’ என்று மாவட்ட நிா்வாகிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். மழை, வெள்ளத்தால் ஜம்முவின் பல பகுதிகளில் சற்று மோசமான சூழல் நிலவுவதாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.
நிலச்சரிவில் 7 போ் உயிரிழப்பு: வைஷ்ணவி தேவி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா். 14 போ் காயமடைந்தனா். நிலச்சரிவில் மேலும் பலா் சிக்கியிருக்கக் கூடும் என்று கருதப்படுவதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
யாத்திரை ரத்து: பலத்த மழையை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பாலங்கள், கைப்பேசி கோபுரங்கள் சேதமடைந்த நிலையில், மின் கம்பிகள் சாய்ந்து விழுந்தன. ஜம்மு-காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் தொலைத்தொடா்பு சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிலவரத்தை கேட்டறிந்த அமித் ஷா: மழை, வெள்ள நிலவரம், வைஷ்ணவ தேவி கோயில் அருகே ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமரிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தொலைபேசியில் கேட்டறிந்தாா்.