திருவாடானை அருகே ஆண் மான் உடல் மீட்பு
திருவாடானை அருகே மாவூா் கண்மாய் பகுதியில் உயிரிழந்து கிடந்த ஆண் மான் உடல் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதியில் அஞ்சுகோட்டை, பாண்டுகுடி, திணையத்தூா், கடம்பாகுடி, அச்சங்குடி மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சங்கிலி தொடா் போல கண்மாய்கள் இருப்பதால் அந்தப் பகுதியில் காட்டு கருவேல மரங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதில் 500-க்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. கோடை காலத்தின் போது வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீா் தேடி ஊருக்குள் வரும் மான்கள் நாய்கள் கடித்து உயிரிழப்பது வாடிக்கையாகும். இந்த நிலையில், வியாழக்கிழமை மாவூா் கண்மாய் பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் மான் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்த அங்கு வந்த வனத் துறையினா் மானின் உடலை மீட்டு கால்நடை மருத்துவா் உதவியுடன் கூறாய்வு செய்து ரசாயனம் ஊற்றி மண்ணில் புதைத்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.