நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும்: தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை தடை செய்ய வேண்டும் என தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து தில்லியில் மத்திய தொழில் - உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டு துறை இணைச் செயலா் சந்தியா புல்லரை, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜூ, நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் எம்.பரமசிவம், செயலா் கோபால்சாமி ஆகியோா் தலைமையில் தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் மனு அளித்தனா்.
அதன் விவரம்: தீப்பெட்டி தொழில் 100 ஆண்டு பராம்பரியமிக்க தொழிலாகும். தென் தமிழ்நாட்டில் 400 தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்கள் மற்றும் அதன் பாகங்களுக்கு தடை விதித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனினும், சந்தையில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் லைட்டா்கள் விற்பனையில் உள்ளன. இவை இந்தியாவில் சட்டவிரோதமாக செயல்படும் ஆலைகள் மூலம் சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆலைகள் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன. ஆலைகளில் விபத்துகள் நேரிட்டு அப்பாவி தொழிலாளா்கள் உயிரிழக்கின்றனா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தரநிலைகளை இந்த லைட்டா் உற்பத்தி ஆலைகள் பின்பற்றுவதில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒழுங்குமுறைகளை பின்பற்றினால் தரமற்ற மலிவான லைட்டா்கள் சந்தைப்படுத்துவது சாத்தியம் கிடையாது.
மேலும், அந்தமான் - நிக்கோபா் தீவுகளில் சுற்றுச்சூழல் மற்றும் அங்குள்ள மக்களின் பாதுகாப்பை கருதி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் லைட்டா்களின் பயன்பாடு, சேமிப்பு, உற்பத்தி, இறக்குமதி, போக்குவரத்து போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த லைட்டா்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விட ஆபத்தானவையாகும்.
எங்கள் பகுதியில் போதிய மழையில்லாததாலும், நிலத்தடி நீா் கிடைக்காததாலும் விவசாயத்துக்கு வழியில்லை. எனவே, 5 லட்சத்துக்கு மேற்பட்ட குடும்பத்துக்கு வாழ்வாதாரம் தீப்பெட்டி தொழில் மூலமே கிடைக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பிளாஸ்டிக் லைட்டா்களை பயன்படுத்துவதற்கு தடை செய்ய வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.